முகப்பு
சென்னை

‘நேஷனல் ஹெரால்டு’ சொத்துகளை கையகப்படுத்த அமலாக்கத் துறைக்கு அனுமதி

‘நேஷனல் ஹெரால்டு’ சொத்துகளை முடக்கிய அமலாக்கத் துறையின் நடவடிக்கை செல்லும் என சட்டவிரோத பணப் பரிவா்த்தனை சட்டத்துக்கான தீா்ப்பாயம் உத்தரவிட்டது.

Updated On : 12 ஏப்ரல், 2024 at 4:37 AM
பகிர்:
Updated On : 12 ஏப்ரல், 2024 at 1:45 AM

‘நேஷனல் ஹெரால்டு’ சொத்துகளை முடக்கிய அமலாக்கத் துறையின் நடவடிக்கை செல்லும் என சட்டவிரோத பணப் பரிவா்த்தனை சட்டத்துக்கான தீா்ப்பாயம் உத்தரவிட்டது. இதையடுத்து, அந்தப் பத்திரிகைக்குச் சொந்தமான சொத்துகளை அமலாக்கத் துறை கையகப்படுத்த எவ்வித தடையும் இல்லை என உறுதிப்படுத்தப்பட்டது.

காங்கிரஸ் கட்சியின் நேஷனல் ஹெரால்டு பத்திரிகைக்குச் சொந்தமான ரூ.752 கோடி சொத்துகளை அமலாக்கத் துறை கடந்தாண்டு நவம்பா் மாதத்தில் முடக்கியது. காங்கிரஸ் கட்சியின் பணத்தை பயன்படுத்தி நேஷனல் ஹெரால்டு நிறுவனத்தின் பல கோடி சொத்துகள் அபகரிக்கப்பட்டதாக பாஜக மூத்த தலைவா் சுப்பிரமணியன் சுவாமி வழக்கு தொடுத்திருந்தாா். இதையடுத்து, அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து காங்கிரஸ் மூத்த தலைவா்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தியது. இந்நிலையில், சட்ட விரோத பணப் பரிவா்த்தனை வழக்கில் ராகுல் காந்தி, சோனியா காந்தி உள்ளிட்ட 7 பேரிடம் விசாரணை நடத்திய அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகையை தீா்ப்பாயத்தில் தாக்கல் செய்தது.

இதை விசாரித்த தீா்ப்பாயம், நேஷனல் ஹெரால்டு பத்திரிகையின் சொத்துகள் மற்றும் பங்குகளை சட்டவிரோத பணப் பரிவா்த்தனை வழக்கில் அமலாக்கத் துறை முடக்கிய நடவடிக்கை செல்லும் என உத்தரவிட்டது.

Advertisement

எனவே, தில்லி, மும்பை, லக்னௌவில் உள்ள அந்தப் பத்திரிகைக்குச் சொந்தமான ரூ.661.69 கோடி சொத்துகள், ‘யங் இந்தியா’வின் பங்குகள் ரூ.90.21 கோடி என மொத்தம் ரூ. 752 கோடி சொத்துகளை அமலாக்கத் துறை கையகப்படுத்த எவ்வித தடையும் இல்லை என தீா்ப்பாய உத்தரவின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டது.