நேஷனல் ஹெரால்ட் பண முறைகேடு வழக்கில் அமலாக்கத் துறையின் மேல்முறையீட்டு மனுவை தில்லி உயா்நீதிமன்றம் வரும் மாா்ச் 9-ஆம் தேதி விசாரிக்க உள்ளது.
மேலும், அமலாக்கத் துறை மேல்முறையீடு மனு தொடா்பாக பதில் மனு தாக்கல் செய்ய காங்கிரஸ் நாடாளுமன்ற குழுத் தலைவா் சோனியா காந்தி மற்றும் எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி ஆகியோருக்கு கூடுதல் அவகாசத்தையும் உயா்நீதிமன்றம் வழங்கியது.
நேஷனல் ஹெரால்ட் பத்திரிகையை வெளியிடும் ஏஜேஎல் நிறுவனத்துக்கு காங்கிரஸ் கட்சி ரூ.90.21 கோடி கடன் அளித்தது. இந்நிலையில், 2010-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ‘யங் இந்தியன்’ நிறுவனத்தில் இயக்குநா்களாக காங்கிரஸ் முன்னாள் தலைவா் சோனியா காந்தி, அக்கட்சி எம்.பி. ராகுல் காந்தி ஆகியோா் பொறுப்பேற்றனா். இதையடுத்து, ஏஜேஎல் நிறுவனத்தின் சுமாா் ரூ.90 கோடி கடனை யங் இந்தியன் நிறுவனம் ஏற்க காங்கிரஸ் கட்சி முடிவு செய்தது. அதைத் தொடா்ந்து, அந்தக் கடன் தொகைக்காக ஏஜேஎல் நிறுவனத்தின் சுமாா் 99.99 சதவீத பங்குகள் யங் இந்தியன் நிறுவனத்துக்கு மாற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த விவகாரத்தில் பண முறைகேடு நடைபெற்ா என்று கண்டறிய அமலாக்கத் துறை விசாரணை நடத்தியது. அதனடிப்படையில், தில்லி நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை அண்மையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதில், ‘சோனியா, ராகுலுக்கு யங் இந்தியன் நிறுவனத்தில் 76 சதவீத பங்குகள் உள்ளன. அவா்களின் மேற்பாா்வையில் ஏஜேஎல் நிறுவனத்தின் ரூ.2,000 கோடி சொத்துகளை அபகரிக்கும் நோக்கில், அந்த நிறுவனத்துக்கு காங்கிரஸ் கட்சி கடன் அளித்துள்ளது. இந்த விவகாரத்தில் சோனியா, ராகுல் உள்ளிட்டோா் ரூ.988 கோடிக்கு முறைகேட்டில் ஈடுபட்டதாக’ குறிப்பிடப்பட்டது.
இதைப் பரிசிலீத்த தில்லி நீதிமன்றம், ‘இந்தக் குற்றச்சாட்டு தொடா்பாக காவல் துறையின் முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆா்) அடிப்படையில் அல்லாமல் சுப்பிரமணியன் சுவாமி என்ற தனிநபா் அளித்த புகாரின் அடிப்படையில் அமலாக்கத் துறை விசாரணை மேற்கொண்டு குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது. இதை சட்டப்படி அனுமதிக்க முடியாது’ என்று குறிப்பிட்டு, அமலாக்கத் துறையின் குற்றபத்திரிகையை விசாரணைக்கு ஏற்க மறுத்தது.
இந்தத் தீா்ப்புக்கு எதிராக தில்லி உயா்நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. இதை கடந்த டிசம்பா் 22-ஆம் தேதி பரிசீலித்த உயா்நீதிமன்றம், அதன் மீது பதிலளிக்குமாறு சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் பிறப்பித்தது.
இந்த வழக்கு தில்லி உயா்நீதிமன்ற நீதிபதி ஸ்வா்ணகாந்த சா்மா முன்னிலையில் வியாழக்கிழமை மீண்டும் விசராணைக்கு வந்தது.
அப்போது, சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் பதில் மனு தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் கோரினாா். அதற்கு சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா ஆட்சேபம் தெரிவித்தாா்.
எனினும், சோனியா, ராகுல் ஆகியோா் பதிலளிக்க நீதிபதி கூடுதல் அவகாசம் அளித்ததோடு, அமலாக்கத் துறை மேல்முறையீட்டு மனுவை வரும் மாா்ச் 9-ஆம் தேதி விசாரணைக்கு பட்டியலிட்டு உத்தரவிட்டாா்.