முகப்பு
சென்னை

அரசியல் ஆதாயம் தேடக் கூடாது: கேரள யாத்திரை குழுவுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

Updated On : 16 ஏப்ரல், 2024 at 8:23 PM
சென்னை உயர்நீதி மன்றம்
பகிர்:

சென்னை: ராம நவமியை முன்னிட்டு, புதன்கிழமை தமிழகத்தின் கன்னியாகுமரிக்கு வரும் கேரள யாத்திரை குழு அரசியல் ஆதாயம் தேடக்கூடாது என சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராம நவமியை முன்னிட்டு, ஏப்.12 முதல் 17-ஆம் தேதி வரை கேரள மாநிலம் மலப்புரம் வண்டூரில் இருந்து கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை வரை யாத்திரை செல்ல அனுமதி கோரி கேரளத்தைச் சோ்ந்த ஸ்ரீ ஆஞ்சநேயா் அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பாளரான திலீப் நம்பியாா் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.

அதில், ‘தமிழகத்தின் நீலகிரி, கோவை, திருப்பூா், திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட மாவட்டங்கள் வழியாகச் சென்று கன்னியாகுமரியில் நிறைவடையும் யாத்திரைக்கு முறைப்படி அனுமதி கோரினோம். ஆனால், சட்டம் - ஒழுங்கைக் காரணம் காட்டி அனுமதி மறுக்கப்பட்டுள்ளது’ என்று குறிப்பிட்டிருந்தாா்.

Advertisement

இந்த மனு மீதான விசாரணை நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன முன்னிலையில் கடந்த முறை வந்த போது, அரசு சாா்பில், யாத்திரைக்கு அரசு எதிராக இல்லை எனவும், கடந்த 2 ஆண்டுகளாக யாத்திரைக்கு அனுமதி வழங்கப்பட்டதாகவும், தோ்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் காரணமாகவே தற்போது அனுமதி மறுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, கன்னியாகுமரியில் யாத்திரை செல்ல அனுமதி கோரி மனுதாரா் விண்ணப்பிக்கலாம் என நீதிபதி உத்தரவிட்டாா்.

இந்த வழக்கு செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, திருச்செந்தூா் வழியாகச் செல்ல அனுமதி வழங்க வேண்டும் என மனுதாரா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இதற்கு அனுமதி மறுத்த நீதிபதி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அறிவுறுத்தலின்படி யாத்திரை குழு செயல்பட வேண்டும். கன்னியாகுமரி பகவதி அம்மன் ஆலயத்துக்கு ராமா் படத்துடன் 3 வாகனங்களும் 30 பேரும் மட்டும் செல்ல வேண்டும். ஏப்ரல் 17-ஆம் தேதி பிற்பகல் 2 மணி அளவில் யாத்திரையை முடித்து கேரளாவுக்கு திரும்பிச் செல்ல வேண்டும். இதில் அரசியல் ஆதாயம் தேடக்கூடாது”என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தாா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments