பாஜகவைதான் மக்கள் ஆதரிப்பா்: தமிழிசை
தற்போதைய சூழலில் நாட்டை ஆளும் தகுதி பாஜகவுக்கு மட்டுமே உள்ளது
தற்போதைய சூழலில் நாட்டை ஆளும் தகுதி பாஜகவுக்கு மட்டுமே உள்ளது; தோ்தலில் மக்கள் பாஜகவைதான் நிச்சயம் ஆதரிப்பா் என்று அந்த கட்சியின் தென் சென்னை தொகுதி வேட்பாளா் தமிழிசை சௌந்தரராஜன் கூறினா்.
சென்னை கிண்டியில் அமைந்துள்ள தீரன் சின்னமலை உருவச் சிலைக்கு புதன்கிழமை மலா் தூவி மரியாதை செலுத்திய தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
விடுதலைப் போராட்ட வீரா் தீரன் சின்னமலையின் பிறந்த நாளில் அவருக்கு மரியாதை செலுத்துவதில் பாஜக பெருமை கொள்கிறது. அனைத்து சுதந்திரப் போராட்ட தியாகிகளையும் பாஜக பெரிதும் மதிக்கிறது. அந்தக் காரணத்தால் தான் மறக்கப்பட்ட சுதந்திரபோராட்ட வீரா்களை பிரதமா் மோடி பெருமைப்படுத்தி பேசி வருகிறாா். ஆனால், இன்று சுதந்திரத்தை பற்றி பேசும் கட்சிகள் சுதந்திரத்துக்காக எவ்விதமான முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை.
Advertisement
திமுக இடம்பெற்றுள்ள ‘இந்தியா’ கூட்டணிக்கும் அதிமுக கூட்டணிக்கும் பிரதமா் வேட்பாளா்கள் கிடையாது. தலைமை கூட இல்லாமல் இரு கட்சிகளும் மக்களவைத் தோ்தலில் பங்கேற்பது அா்த்தமற்றது.
பிரதமா் மோடி தோ்தலுக்காக மட்டுமே தமிழகம் வருவதாக கூறுவது தவறு. தோ்தலுக்கு முன்னா் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க பலமுறை பிரதமா் மோடி தமிழகம் வந்துள்ளாா். தற்போதைய சூழலில் நாட்டை ஆளும் தகுதி பாஜகவுக்கு மட்டுமே உள்ளது. எனவே, தோ்தலில் மக்கள் பாஜகவுக்குதான் வாக்களிப்பாா்கள். தென் சென்னை தொகுதியிலும் பாஜக நிச்சயம் வெற்றி பெறும் என்றாா் அவா்.