முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை; மௌனம் காக்கும் திமுக! - தமிழிசை விமர்சனம்

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு குறித்து தமிழக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பேச்சு...

Updated On : 19 மார்ச் 2026, 2:32 pm IST
தமிழிசை சௌந்தரராஜன் - DIN
பகிர்:

பெண்களைத் தவறாகப் பேசியதற்காக போராட்டம் நடத்தும் அரசியல் கட்சிகள், பெண்கள் உயிரிழப்பு சம்பவங்களில் மௌனம் காக்கின்றன என தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்தார்.

சென்னையில் தமிழக பாஜக மாநில தேர்தல் அலுவலகத்தில் இன்று தெலுங்கு புத்தாண்டு (உகாதி) விழா கொண்டாடப்பட்டது.

இந்த விழாவில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய தமிழக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், தமிழகத்தில் கன்னட மற்றும் தெலுங்கு பேசும் மக்களுக்கு யுகாதி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.

Advertisement

சென்னை உள்ளிட்ட பகுதிகளில் பல மொழி பேசும் மக்கள் ஒன்றிணைந்து வாழ்ந்து வருவதாகவும் ஆனால் அனைவரையும் இணைக்கும் கருத்தாக இருந்த திராவிடம், அரசியல் நோக்கத்திற்காக பயன்படுத்தப்பட்டு, தமிழர் அடையாளம் மறைக்கப்படுகிறது என குற்றம்சாட்டினார்.

ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் யுகாதி வாழ்த்துக்களிலும்கூட பிரிவினையை உருவாக்கியுள்ளனர், தமிழர்களின் அடையாளம் மங்கிக் கொண்டிருக்கிறது. கீழடிக்கு முதன்முதலில் அதிக நிதி ஒதுக்கியது பிரதமர் மோடிதான், அதனை மறைத்து வேறு விதமாக கூறப்படுவதாகவும் அவர் விமர்சித்தார்.

இந்தி மொழி விவகாரத்தில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை சிலர் அரசியல் காரணங்களுக்காக பயன்படுத்தி குழப்பம் ஏற்படுத்துகிறார்கள், இதனை தவிர்க்க வேண்டும். விளாத்திகுளம் சம்பவத்தை குறிப்பிட்டு, தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை எனவும் குற்றம்சாட்டினார்.

திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு அழுத்தம் இல்லை என கூறப்படுவது உண்மைக்கு புறம்பானது. முன்பு ஆறு தொகுதிகளில் போட்டியிட்ட கம்யூனிஸ்ட் கட்சி தற்போது ஐந்து தொகுதிகளில் மட்டுமே போட்டியிடுவது இதற்கு உதாரணம். பாஜகவை காரணம் காட்டி கூட்டணி கட்சிகளின் தொகுதிகள் குறைக்கப்படுகின்றன.

எடப்பாடி பழனிச்சாமியின் தில்லி பயணம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, கூட்டணி கட்சித் தலைவர்களைச் சந்திப்பது இயல்பான ஒன்று என்றார்.

பெண்களை இழிவாக பேசுவது தவறு என்றும் அதனை கண்டிப்பதாகவும் தெரிவித்தார்.

விளாத்திகுளம் மாணவி படுகொலைக்கு திமுக கூட்டணி கட்சிகள் கண்டனம் தெரிவிக்காததைச் சுட்டிக்காட்டிய அவர், ஒரு வார்த்தை தவறாக பேசப்பட்டதற்காக போராட்டம் நடத்தும் அரசியல் கட்சிகள், உயிரிழப்பு சம்பவங்களில் மௌனம் காக்கின்றன என விமர்சித்தார்.

மேலும், ஓபிஎஸ் தனது கொள்கைகளை மறந்துவிட்டதாகவும், அவரைப் பற்றி பேச விருப்பமில்லை என்றும் தெரிவித்தார்.

பாஜக தேர்தல் அறிக்கை இறுதி கட்டத்தில் உள்ளது. இன்று மாலை மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனிடம் ஒப்படைக்கப்படும் என்றும் கூறினார்.

summary

TN BJP senior leader Tamilisai Soundararajan on law and order in Tamil Nadu

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.