இபிஎஸ் பிரசாரத்தில் தமிழிசை! மயிலாப்பூரில் போட்டி?
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பிரசாரத்தில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பங்கேற்பு...
சென்னை மயிலாப்பூரில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று தனது பிரசாரத்தைத் தொடங்கியுள்ள நிலையில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பங்கேற்றுள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 23 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. அதிமுக தலைமையில் களமிறங்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளுக்கு இடையே தொகுதிப் பங்கீட்டு ஒப்பந்தம் திங்கள்கிழமை கையொப்பமானது.
தொடர்ந்து இன்று(புதன்கிழமை) தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் குறித்து எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
Advertisement
இதன் தொடர்ச்சியாக இன்று மயிலாப்பூரில் இருந்து பிரசாரத்தைத் தொடங்குவதற்கு முன்னதாக எடப்பாடி பழனிசாமி, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.
என்டிஏ கூட்டணியில் மயிலாப்பூர் தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பாஜக போட்டியிடும் தொகுதியில் இருந்து இபிஎஸ் தனது பிரசாரத்தைத் தொடங்கியுள்ளார்.
சென்னை மயிலாப்பூரில் தேரடி வீதியில் எடப்பாடி பழனிசாமியின் தேர்தல் பிரசாரத்தில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பங்கேற்றுள்ளார். ஒரே வேனில் இருவரும் நின்றபடி வாக்கு சேகரித்தனர்.
மயிலாப்பூர் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், இந்த தொகுதியில் தமிழிசை சௌந்தரராஜன் போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.