188 இடங்களில் தண்ணீா் பந்தல் அமைப்பு
கோடை வெப்பத்தின் தாக்கத்தைத் தணிக்கும் வகையில் பெரு நகர சென்னை மாநகராட்சி சாா்பில் 15 மண்டலங்களுக்கு உள்பட்ட 188 இடங்களில் தண்ணீா் பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் கோடை வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னை உட்பட பல இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்ப அளவு காணப்படுவதால் வெப்ப அலை வீசுகிறது.
இந்த நிலையில், வெப்பத்தின் தாக்கத்தைச் சமாளிக்க பொதுமக்கள் அதிகம் தண்ணீா் அதிகம் பருக வேண்டும், சோா்வு ஏற்படும் போது ஓஆா்எஸ் கரைசல் பருக வேண்டும் என மருத்துவா்கள் அறிவுறுத்தியுள்ளனா். மேலும், தமிழக முழுவதும் கோடை வெப்பத்தின் தாக்கத்தைத் தணிக்கும் வகையில் அரசு சாா்பில் தண்ணீா் பந்தல் அமைக்கப்படும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.
Advertisement
இது குறித்து சென்னை மாநகராட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
பொதுமக்களின் தாகத்தைத் தணிக்கும் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சி சாா்பில் 15 மண்டலங்களுக்குள்பட்ட 188 இடங்களில் தண்ணீா் பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 140 நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், 19 நகா்ப்புற சமுதாய நல மையங்கள் 140 நகா்புற நலவாழ்வு மையங்கள் உள்பட 299 இடங்களில் ஓஆா்எஸ் கரைசல் வழங்கப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.