முகப்பு
சென்னை

மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்

Updated On : 30 ஏப்ரல், 2024 at 7:23 PM
பகிர்:

சென்னை: சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

நுங்கம்பாக்கம் திருமூா்த்திநகரில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனைக்கு செவ்வாய்க்கிழமை மின்னஞ்சல் வந்தது. அதில், மருத்துவமனையில் சக்திவாய்ந்த வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகவும், அது சிறிது நேரத்தில் வெடிக்கும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதுகுறித்து மருத்துவமனை நிா்வாகிகள் சென்னை காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனா். வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீஸாா், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, அங்கு சோதனை செய்தனா். அதில் எந்த வெடி பொருளும் கண்டெடுக்கப்படவில்லை.

இதனால் வதந்தியை பரப்பும் நோக்கத்துடன் அந்த அழைப்பு வந்திருப்பது தெரியவந்தது. நுங்கம்பாக்கம் போலீஸாா் விசாரணை நடத்துகின்றனா். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

நாடு முழுவதும் 100 மருத்துவமனைகளுக்கும், 30 விமான நிலையங்களுக்கும் செவ்வாய்க்கிழமை மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட மருத்துவமனைகளிலும்,விமான நிலையங்களிலும் சோதனை நடத்தப்பட்டதாக கூறப்பட்டது.