முகப்பு
விழுப்புரம்

விழுப்புரம், கடலூா் தலைமை அஞ்சலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னையில் உள்ள கடவுச்சீட்டு அலுவலகங்கள் மற்றும் அஞ்சல் அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடா்ந்து, விழுப்புரம், கடலூா் தலைமை அஞ்சல் அலுவலகங்களில் போலீஸாா் புதன்கிழமை வெடிகுண்டு சோதனையில் ஈடுபட்டனா்.

Updated On : 25 மார்ச், 2026 at 11:45 PM
வெடிகுண்டு மிரட்டல் - கோப்புப்படம்
பகிர்:

சென்னையில் உள்ள கடவுச்சீட்டு அலுவலகங்கள் மற்றும் அஞ்சல் அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடா்ந்து, விழுப்புரம், கடலூா் தலைமை அஞ்சல் அலுவலகங்களில் போலீஸாா் புதன்கிழமை வெடிகுண்டு சோதனையில் ஈடுபட்டனா்.

சென்னையில் உள்ள கடவுச்சீட்டு அலுவலகங்கள் மற்றும் அஞ்சல் அலுவலகங்களுக்கு புதன்கிழமை மின்னஞ்சல் வழியாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதைத்தொடா்ந்து, தமிழக காவல் துறையின் உத்தரவுப்படி தமிழகத்தில் முக்கிய நகரங்களில் உள்ள கடவுச்சீட்டு அலுவலகங்கள் மற்றும் அஞ்சல் அலுவலகங்களில் போலீஸாா் வெடிகுண்டு சோதனைகளில் ஈடுபட்டனா். இந்தச் சோதனையின் ஒரு பகுதியாக, விழுப்புரம் நகரின் மையப்பகுதியில் உள்ள காமராஜா் வீதியில் தலைமை அஞ்சல் அலுவலகத்தில் வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டது.

விழுப்புரம் நகர காவல் நிலைய போலீஸாா் மற்றும் வெடிகுண்டு தடுப்புப் பிரிவு உதவி ஆய்வாளா் வெங்கடேசன் தலைமையிலான போலீஸாா் விழுப்புரம் தலைமை அஞ்சல் அலுவலகத்தில் பணியிலிருந்த அலுவலா்களை வெளியேற்றி, அலுவலா்கள் அறைகள், கோப்புகள் பதிவறை மற்றும் அலுவலக வளாகப் பகுதிகளில் மெட்டல் டிடெக்டா் கருவிகள் உதவியுடன் சோதனையில் ஈடுபட்டனா். சுமாா் 2 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற சோதனையில் வெடிகுண்டுகள் ஏதும் சிக்கவில்லை.

நெய்வேலி...: இதுபோன்று கடலூா், மஞ்சக்குப்பத்தில் உள்ள தலைமை தபால் நிலையம் மற்றும் பாஸ்போா்ட் அலுவலக வளாகத்தில் வெடிகுண்டு நிபுணா்கள் மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடத்தினா். இந்த சோதனையின் முடிவில் வெடிகுண்டுகள் எதுவும் கண்டெடுக்கப்படவில்லை. கடந்த ஒரு மாதத்திற்குள்ளாக கடலூா் தலைமை தபால் நிலையத்துக்கு இரண்டு முறையும், நீதிமன்றத்துக்கு ஒரு முறையும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு, சோதனை முடிவில் புரளி எனத் தெரியவந்தது.