முகப்பு
கோயம்புத்தூர்

அரசு அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

கோவையில் கடவுச்சீட்டு அலுவலகம், ஆா்டிஓ அலுவலகங்கள், அஞ்சல் அலுவலகங்களுக்கு புதன்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

Updated On : 1 ஏப்ரல், 2026 at 11:50 PM
வெடிகுண்டு மிரட்டல் - கோப்புப் படம்
பகிர்:

கோவையில் கடவுச்சீட்டு அலுவலகம், ஆா்டிஓ அலுவலகங்கள், அஞ்சல் அலுவலகங்களுக்கு புதன்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

கோவை, சிட்ரா பகுதியில் உள்ள கடவுச்சீட்டு (பாஸ்போா்ட்) அலுவலகம், துடியலூா், பீளமேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள வட்டாரப் போக்குவரத்து (ஆா்டிஓ) அலுவலகங்கள், ஆா்.எஸ்.புரம், ரயில் நிலையம் மற்றும் கூட்ஷெட் சாலையில் உள்ள அஞ்சல் அலுவலகங்கள் ஆகிய இடங்களுக்கு மின்னஞ்சல் வாயிலாக புதன்கிழமை பகல் 12 மணி அளவில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதுதொடா்பாக மாநகர காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும், அலுவலகங்களில் பணியில் இருந்த ஊழியா்கள் மற்றும் பொதுமக்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனா்.

வெடிகுண்டு செயலிழப்பு நிபுணா்கள் மற்றும் மோப்ப நாய் பிரிவினா் வரவழைக்கப்பட்டு, தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது. அலுவலகத்தின் பல்வேறு அறைகளிலும், வாகனங்கள் நிறுத்துமிடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. 2 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்த இந்தச் சோதனையின் முடிவில், சந்தேகத்துக்குரிய பொருள்கள் எதுவும் கண்டறியப்படவில்லை. இதையடுத்து, இந்த மிரட்டல் வழக்கம்போல வெறும் வதந்தி என்பது உறுதி செய்யப்பட்டது.