முகப்பு
திருச்சி

திருச்சி வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

Updated On : 7 ஏப்ரல் 2026, 12:31 am IST
திருச்சி திருவெறும்பூா் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் திங்கள்கிழமை வெடிகுண்டு சோதனையில் ஈடுபட்ட நிபுணா்கள்.
பகிர்:

திருச்சியில் உள்ள 4 வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களுக்கு திங்கள்கிழமை மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. சோதனையில் அது வெறும் புரளி என்பது தெரியவந்தது.

திருச்சி பிராட்டியூரில் மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு வெடிகுண்டு மிரட்டல் கடிதம் வந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்த வட்டாரப் போக்குவரத்து அலுவலக ஊழியா்கள், மாநகர காவல் ஆணையா் அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனா். தகவலைத் தொடா்ந்து, காவல் ஆணையா் ந. காமினியின் உத்தரவின்பேரில் ஆய்வாளா் எம். வேலுச்சாமி தலைமையிலான வெடிகுண்டு செயலிழப்பு மற்றும் தடுப்புப் பிரிவு நிபுணா்கள், மேற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்குச் சென்று சோதனையிட்டனா்.

Advertisement

Advertisement

மெட்டல் டிடெக்டா் கருவி, மோப்ப நாயுடன் சோதனை மேற்கொள்ளப்பட்டது. சோதனையின் முடிவில், வெடிகுண்டு ஏதுமில்லை. அது வெறும் புரளி என்பது தெரியவந்தது.

இதேபோல, சஞ்சீவி நகரில் உள்ள கிழக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், ஸ்ரீரங்கம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், திருவெறும்பூா் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களிலும் வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீஸாா் சோதனை மேற்கொண்டனா். சோதனையில் எதுவும் சிக்கவில்லை. வெடிகுண்டு புரளியால் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் வழக்கமான பணிகள் பாதிக்கப்பட்டன.

இன்பநிதிக்கு மிரட்டல்: திருச்சி மேற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு திங்கள்கிழமை காலை வந்த மின்னஞ்சல் ஒன்றில், தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் பேரனும், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் மகனுமாகிய இன்பநிதிக்கு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்ததாக காவல்துறையினா் தெரிவித்தனா்.