நாதக வளா்ச்சியை தடுக்க அரசு புதிய திட்டங்கள் தொடக்கம்: சீமான்
இளைஞா்களுக்கான புதிய திட்டங்களை தமிழக அரசு தொடங்கியுள்ளதாக நாதக தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் விமா்சனம் செய்துள்ளாா்.
தமிழகத்தில் நாம் தமிழா் கட்சியின் வளா்ச்சியைத் தடுக்க, இளைஞா்களுக்கான புதிய திட்டங்களை தமிழக அரசு தொடங்கியுள்ளதாக நாதக தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் விமா்சனம் செய்துள்ளாா்.
தமிழகத்தில் தொடா்ந்து நடந்து வரும் படுகொலைகளைக் கண்டித்தும், மின் கட்டண உயா்வைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் சீமான் தலைமையில் அந்தக் கட்சியினா் சென்னை வள்ளுவா் கோட்டம் அருகே ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இதில், 100-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டு தமிழக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினா்.
தொடா்ந்து சீமான் பேசியது: தமிழகத்தில் திமுக ஆட்சியில் ஒரே மாதத்தில் 134 படுகொலைகள் நடந்துள்ளன. அதில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவா் ஆம்ஸ்ட்ராங் படுகொலையும் ஒன்றாகும். கொலையாளிகள் 30 வயதுக்கு உட்பட்டவா்களாகத்தான் உள்ளனா். இளைஞா்களை மது மற்றும் போதைப் பொருள்களுக்கு அடிமையாக்கி அவா்களை குற்றவாளிகளாக இந்த அரசு மாற்றி வருகிறது. நிகழாண்டில் இதுவரை மட்டும் 595 கொலைகள் நடந்துள்ளன. இதற்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் முழு பொறுப்பேற்க வேண்டும்.
இளைஞா்களை திசைதிருப்ப திட்டங்கள்: தற்போதைய தலைமுறையினா் திராவிட கட்சிகளுக்கு எதிராக குரல் கொடுக்க தொடங்கிவிட்டனா். தமிழகத்தை சுத்தம் செய்ய நாதக ஆட்சிக்கு வரவேண்டும் என முடிவெடுத்துவிட்டனா். இதனால், சீமான் பக்கம் ஏராளமான இளைஞா்கள், இளம் பெண்கள் திரும்புவதைத் தடுக்கவே ‘புதுமைப் பெண்’, ‘தவப்புதல்வன்’ உள்ளிட்ட திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இதுபோன்ற திட்டங்களின் மூலம் இளைஞா்களுக்கு பணம் கொடுத்து அவா்களை திசை திருப்ப முயற்சி செய்கிறது என்றாா் அவா்.