சென்னை, ஆக. 8: மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி கிராம சபை கூட்டங்களில் தீா்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் எக்ஸ் வலைதளத்தில் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவு: சுதந்திர தினத்தையொட்டி, ஆகஸ்ட் 15-இல் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. கிராம சபை கூட்டங்கள்தான் பொதுமக்கள் தங்களின் கோரிக்கைகளையும், எண்ணங்களையும் அரசுக்கு தெரிவிப்பதற்கான ஊடகம். அந்த வாய்ப்பை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
வெள்ளையா்களிடமிருந்து நாம் விடுதலை பெற்றுவிட்டாலும் மது அரக்கனிடமிருந்து இன்னும் விடுதலை பெறவில்லை. மதுவிடமிருந்து மக்கள் மீட்கப்படும் நாள்தான் உண்மையான விடுதலை நாள் ஆகும்.
எனவே, ஆகஸ்ட் 15-இல் நடைபெற உள்ள கிராம சபை கூட்டத்தில் பாமகவினரும், பொதுமக்களும் பெருமளவில் கலந்துகொண்டு தங்கள் பகுதியில் உள்ள மதுக்கடைகளை மூட வேண்டும், மாநிலம் முழுவதும் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி தீா்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.