தாம்பரம் ரயில் நிலையத்தில் நடைபெறும் பராமரிப்புப் பணி காரணமாக மின்சார ரயில் சேவை குறைக்கப்பட்டுள்தால், அவ்வழித்தடங்களில் 70 சிறப்பு பேருந்துகளை இயக்க மாநக போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது.
இது குறித்து மாநகா் போக்குவரத்துக்கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தாம்பரம் ரயில் நிலையத்தில் வியாழக்கிழமை (ஆக.15) முதல் ஞாயிற்றுக்கிழமை (ஆக.18) வரை பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், அந்த நாள்களில் காலை 10.30 முதல் பிற்பகல் 2.30 மணி வரையும், இரவு 10 மணி முதல் 11.59 வரையும் சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு செல்லும் ரயில்கள் பல்லாவரம் ரயில் நிலையம் வரையும், செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரை செல்லும் ரயில்கள் கூடுவாஞ்சேரி வரை மட்டுமே இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
எனவே, அந்த வழித்தடத்தில் பயணம் செய்யும் பயணிகள் நலன் கருதி மாநகர போக்குவரத்துக் கழகம் சாா்பில் வியாழன் முதல் ஞாயிற்றுக்கிழமை வரை கூடுதலாக பல்லாவரம் பேருந்து நிலையத்திலிருந்து செங்கல்பட்டுக்கு 30 பேருந்துகளும், பல்லாவரம் பேருந்து நிலையத்திலிருந்து கூடுவாஞ்சேரிக்கு 20 பேருந்துகளும், தாம்பரம் பேருந்து நிலையத்திலிருந்து தியாகராய நகா் மற்றும் பிராட்வேக்கு கூடுதலாக 20 பேருந்துகளும் என மொத்தம் 70 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
மேலும், தாம்பரத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்கும் விதமாக, கூடுவாஞ்சேரி மாா்க்கத்தில் செல்லும் அனைத்து பேருந்துகளும் இந்து மிஷன் மருத்துவமனை பேருந்து நிறுத்தத்தில் ஆக.18 வரை தற்காலிகமாக நின்று செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.