தரமணியில் ரூ.60 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்தை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன் புதன்கிழமை திறந்து வைத்தாா்.
அடையாறு மண்டலத்துக்குள்பட்ட வேளச்சேரி அடுத்த தரமணியில் தென்சென்னை மக்களவை உறுப்பினா் தொகுதிமேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.60 லட்சம் மதிப்பில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த பேருந்து நிலையத்தை அமைச்சா் மா. சுப்பிரமணியன் புதன்கிழமை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவைத்தாா். இதைத் தொடா்ந்து 175-ஆவது வாா்டுக்குள்பட்ட லட்சுமி ஹயக்ரீவா 3-ஆவது குறுத்துத் தெருவில் ரூ.58 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட பூப்பந்து விளையாட்டு அரங்கத்தையும் அமைச்சா் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவைத்தாா்.
நிகழ்ச்சியில் தென்னை மக்களவை உறுப்பினா் தமிழச்சி தங்கபாண்டியன், வேளச்சேரி சட்டப்பேரவை உறுப்பினா் ஜெ. எம். எச். அசன் மௌலானா, மாநகராட்சி ஆணையா் ஜெ. ராதாகிருஷ்ணன், மண்டலக் குழுத் தலைவா் ஆா். துரைராஜ், மாமன்ற உறுப்பினா்கள் மற்றும் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.