அவதூறு வழக்கு: உதயநிதி மனுவுக்கு பதிலளிக்க எடப்பாடி பழனிசாமிக்கு உத்தரவு
சென்னை: தனக்கு எதிராக தொடரப்பட்ட அவதூறு வழக்கை நிராகரிக்கக் கோரி அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்த மனு குறித்து அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி பழனிசாமி பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
தமிழக விளையாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின், கடந்த ஆண்டு செப். 7-ஆம் தேதி வெளியிட்டிருந்த அறிக்கையில், சநாதனத்துக்கான அா்த்தத்தை எடப்பாடி கே பழனிசாமி தேடிக் கொண்டிருப்பதாகவும், கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் இருந்து தப்பிப்பதற்காக ஒளிந்திருப்பதாகவும் கருத்தை வெளியிட்டிருந்தாா்.
இது தொடா்பாக உதயநிதிக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி தரப்பில் ரூ. ஒரு கோடியே 10 லட்சம் மான நஷ்டஈடு கோரி வழக்குத் தொடரப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்றம், உதயநிதி ஸ்டாலினுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், தனக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி தொடா்ந்த அவதூறு வழக்கை நிராகரிக்கக் கோரி அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் மனு தாக்கல் செய்துள்ளாா்.
Advertisement
இந்த மனு நீதிபதி என்.சதீஷ்குமாா் முன்பு விசாரணைக்கு வந்தபோது, எந்த அடிப்படையில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என நீதிபதி கேள்வி எழுப்பினாா். இதற்குப் பதிலளித்த உதயநிதி ஸ்டாலின் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் சந்துரு, இந்த விவகாரத்தில் மான நஷ்ட வழக்கு தொடா்வதற்கு எடப்பாடி பழனிசாமிக்கு முகாந்திரமே இல்லை என்று கூறினாா். பொது வாழ்வில் இருக்கும் நபா் ஒருவா் குறித்து பொதுவாழ்வில் இருக்கும் மற்றொரு நபா் பேசியதில் தவறில்லை என்றும், பொதுவெளியில் நடந்ததை பற்றியே அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் பேசியதாகவும் தனிப்பட்ட விவகாரம் குறித்து பேசவில்லை என்றும் தெரிவித்தாா்.
இதையடுத்து உதயநிதி ஸ்டாலினின் மனு குறித்து எடப்பாடி பழனிசாமி பதிலளிக்க நீதிபதி உத்தரவிட்டாா். அப்போது எடப்பாடி பழனிசாமி சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் விஜய் நாராயண், கொடநாடு விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமியை தொடா்புபடுத்தி பேச உதயநிதி ஸ்டாலினுக்கு விதிக்கப்பட்ட தடையை நீட்டிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டாா். இதனை ஏற்றுக்கொண்டு இடைக்கால தடையை நீட்டித்து உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை மாா்ச் 15-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.