காலில் விழுந்து ஆசி பெறுவது தமிழர்களின் பண்பாடு: உதயநிதிக்கு இபிஎஸ் பதில்!
உதயநிதிக்குப் பதிலளித்த அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி.
காலில் விழுந்து ஆசி பெறுவது தமிழர்களின் பண்பாடு என்று துணை முதல்வர் உதயநிதியின் விமர்சனத்துக்கு, அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்துள்ளார்.
சேலம் மாவட்டம் கெங்கவல்லி சட்டப்பேரவை தொகுதி அதிமுக வேட்பாளர் நல்ல தம்பி எம்எல்ஏவுக்கு அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி வீரகனூர் பகுதியில் பிரசாரம் மேற்கொண்டு வாக்கு சேகரித்தார் .
அப்போது அவர் கூறியதாவது:
Advertisement
”கெங்கவல்லி சட்டமன்ற தொகுதிக்கு நல்லதம்பி எம்எல்ஏ நிறுத்தப்பட்டுள்ளார். அவருக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களியுங்கள்.
இன்றைக்கு உதயநிதி ஸ்டாலின் ஏதோ பேசி வருகிறார் பாவம். எவ்வளவு ஆணவ பேச்சு, தமிழர்களின் பண்பாடு, பொறுப்பு கிடைக்கிறபோது ஆசி பெறுவது... இது தவறா?
திருமணம் முடிந்ததும் பெரியவர்கள் காலில் ஆசீர்வாதம் வாங்குகிறோம். வேலை கிடைக்கிறது, நம்முடைய பெரியோர்களிடம் ஆசி வாங்குகிறோம்.
இதை எல்லாம் உயர்ந்த பண்பு உள்ளவர்களுக்கு தெரியும், பண்பு இல்லாத குடும்பத்தில் பிறந்தவருக்கு தெரிய வாய்ப்பில்லை.
52 ஆண்டுகளாக அரசியல் வாழ்க்கையில் நான் யாரையும் தரக்குறைவாக பேசியது இல்லை . என்னை தர குறைவாக பேசினால், நாங்கள் விடமாட்டோம், எங்களது தொண்டர்கள் விடமாட்டார்கள். இன்றைக்கு துணை முதல்வர் உதயநிதி, 2 மணிக்கு என்ன செய்கிறார். இன்ஸ்டாகிராமில் ரீ போஸ்ட் செய்கிறார்.
யாருடைய காலை தேடி, இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போடுகிறீர்கள். எங்களுக்கு கேட்க தெரியாதா? அது மட்டுமல்ல, ஏற்கனவே நீங்க காலை தேடி போய்தான், பால்டாயில் குடித்து தப்பித்து இருக்கிறீர்கள். மீண்டும் பால்டாயில் குடித்தால் உடம்பு தாங்காது தம்பி.
உங்களது அப்பா, தாத்தா மூலம் உங்களுக்கு பதவி கிடைத்திருக்கிறது, இவர்கள் இல்லை என்றால் பதவி கிடைத்திருக்குமா? நான், விவசாய குடும்பத்தில் பிறந்து கிளைச் செயலாளராக இருந்து, இன்று இந்த நிலைக்கு உயர்ந்திருக்கிறேன்” என்றார்.
பிரசாரத்தின்போது, சசிகலா காலில் இபிஎஸ் விழும் புகைப்படத்தை மக்களிடம் உதயநிதி காட்டியதற்கு, அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்து பேசியுள்ளார்.