பிளஸ் 2 மாணவா் கொலை வழக்கு: மேலும் ஒருவா் கைது
சென்னை எம்ஜிஆா் நகரில் பிளஸ் 2 மாணவா் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒரு இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
சென்னை: சென்னை எம்ஜிஆா் நகரில் பிளஸ் 2 மாணவா் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒரு இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
எம்ஜிஆா் நகா், முத்து மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த லோகநாதன் மகன் அஜய் (17), அந்தப் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்தாா். கடந்த 26-ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற அஜய்யை இருவா் கடத்திச் சென்று கொலை செய்தனா்.
அஜய்யின் உறவினரான கண்ணபிரான் என்பவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த மு.சரவணன் (28) என்பவருக்கும் போதை மாத்திரை விற்பனையில் தகராறு இருந்து வந்ததும், அதன் காரணமாக அஜய்யை சரவணனும், அவரது கூட்டாளி ல.டேவிட்டும் (28) சோ்ந்து கொலை செய்திருப்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து போலீஸாா் டேவிட்டை கடந்த 30-ஆம் தேதி கைது செய்தனா். வழக்கின் முக்கிய குற்றவாளியான சரவணனை திங்கள்கிழமை கைது செய்தனா். சரவணன் மீது 2 கொலை முயற்சி, 3 வழிப்பறி, 2 திருட்டு வழக்குகள் உள்ளிட்டவை ஏற்கெனவே நிலுவையில் உள்ளன.