செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 37-ஆவது முறையாக நீட்டிப்பு
சென்னை: சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைதான முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை ஜூன் 10 வரை நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் 14-ஆம் தேதி கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜிக்கு எதிராக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமலாக்கத் துறையினா் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தனா். 3,000 பக்கங்களுடன் கூடிய இந்த குற்றப்பத்திரிகை நகல் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்டது.
செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் செவ்வாய்க்கிழமையுடன் முடிவடைவதால் புழல் சிறையிலிருந்து காணொலி மூலம் சென்னை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன் செந்தில் பாலாஜி ஆஜா்படுத்தப்பட்டாா். இதையடுத்து, செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை ஜூன் 10 வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டாா். இதன்மூலம் 37-ஆவது முறையாக நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேலும், வங்கி ஆவணங்கள் தொடா்பாக செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த இரு மனுக்கள் மீதான விசாரணையையும் ஜூன் 10- ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தாா்.