பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவல் அதிகாரி கைது!
கோவை புதூர் 4 ஆவது போலீஸ் பட்டாலியன் படைப் பிரிவில் பணி புரிந்த பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவல் அதிகாரி செந்தில்குமார் கைது குறித்து...
கோவை புதூர் 4 ஆவது போலீஸ் பட்டாலியன் படைப் பிரிவில் பணி புரிந்த பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவல் அதிகாரி செந்தில்குமார் கைது செய்யப்பட்டார்.
கோவை புதூர் பகுதியில் தமிழ்நாடு 4 ஆவது பட்டாலியன் படைப் பிரிவு உள்ளது. இதில் கமாண்டராக (காவல் கண்காணிப்பாளர் அந்தஸ்து) செந்தில்குமார் பணியாற்றி வந்தார். இவர் அங்கு பணி செய்யும் பெண்கள் மற்றும் பெண் காவலர்களுக்கு பல்வேறு பாலியல் தொந்தரவுகளை கொடுத்து வந்ததாக தெரிகிறது. மேலும் அவர் பெண்களிடம் பாலியல் ரீதியாக அத்துமீறி பேசி வந்துள்ளார். இது தொடர்பான புகார்கள் காவல் உயரதிகாரிகளிடம் அளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அவர் மீது துறை ரீதியான விசாரணை நடைபெற்று வந்த நிலையில், கடந்த மாதம் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
இந்த நிலையில், பாதிக்கப்பட்ட பெண்கள் போத்தனூரில் உள்ள கோவை தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் அனைத்து மகளிர் காவலர் பத்து பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
இதனைத் தொடர்ந்து அனைத்து மகளிர் காவலர்கள் எஸ்.பி. செந்தில்குமாரை கைது செய்தனர். தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். தொடர்ந்து அனைத்து மகளிர் காவல் நிலைய காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பாலியல் புகாரில் உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.