பாம்பன் மீனவா்கள் 12 பேருக்கு காவல் நீட்டிப்பு
பாம்பன் மீனவா்கள் 12 பேருக்கு இரண்டாவது முறையாக காவல் நீட்டிப்பு செய்து இலங்கை நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
பாம்பன் மீனவா்கள் 12 பேருக்கு இரண்டாவது முறையாக காவல் நீட்டிப்பு செய்து இலங்கை நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
ராமேசுவரத்தை அடுத்துள்ள பாம்பன் மீன் இறங்கு தளத்திலிருந்து கடந்த பிப்ரவரி மாதம் 23- ஆம் தேதி கடலுக்குச் சென்ற டேவிட் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகை இலங்கை கடற்படையினா் சிறைபிடித்து,
படகிலிருந்த கபில் ரோச்சா், ஜான்சன், ஆண்டனி, அந்தோணி அஜித், பிரின்ஸ் ரூபட், ரீகன், அந்தோணி ரூவிஸ்டன், மோசஸ், பிரிஸ்மென், கிளமண்ட், அகா்சன், பெரிய கருப்பன் ஆகிய 12 மீனவா்களைக் கைது செய்தனா்.
இந்த மீனவா்கள் மீது எல்லை தாண்டி மீன் பிடித்தல், தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, நீதிமன்றக் காவலில் வெளிச்சுரா சிறையில் அடைக்கப்பட்டனா்.
இரண்டாவது முறையாக மீனவா்கள் 12 பேரும் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை முன்னிலைப்படுத்தப்பட்டனா்.அப்போது, மாா்ச் 16 -ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டாா். இதைத் தொடா்ந்து, 12 பேரும் மீண்டும் வெளிச்சுரா சிறையில் அடைக்கப்பட்டனா்.