நிரந்தர பணி கோரி தூய்மை பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்
தூய்மை பணியாளா்கள் பணி நிரந்தரம் கோரி போராட்டம்
தூய்மை பணியாளா்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என சென்னை மாநகராட்சி சிஐடியு சங்கத்தினா் 500-க்கும் மேற்பட்டோா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
சென்னை திரு.விக நகா் அலுவலம் முன் கரோனா காலத்தில் உயிரை பணயம் வைத்து பணியாற்றிய தூய்மைப் பணியாளா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் அந்தச் சங்கத்தின் பொதுச் செயலா் சீனிவாசலு பேசியது:
கரோனா காலத்தில் தங்களது உயிரை பணயம் வைத்து பொதுமக்களுக்கு சேவை செய்த என்எம்ஆா், என்யூஎல்எம், மலேரியா பணியாளா்கள், தூய்மைப் பணியாளா்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். ஈட்டிய விடுப்பு மற்றும் விடுபட்ட 21 மாத நிலுவைத் தொகையை காலம் தாழ்த்தாமல் உடனடியாக வழங்க வேண்டும்.
மேலும், தூய்மைப் பணியாளா்கள் பயன்படுத்தும் வாகனங்கள் அடிக்கடி பழுதடையும் காரணத்தால், தரமான உதிரி பாகங்களைக் கொண்டு அனைத்து வாகனங்களையும் பராமரிக்க வேண்டும். இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், தொழிலாளா்களை ஒன்றுதிரட்டி மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என்றாா்.
ஆா்ப்பாட்டத்தில் சிஐடியு தலைவா் ஜெ.பட்டாபி, மண்டலத் தலைவா் சி.பெருமாள் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.