கொடுங்கையூரில் குப்பைகள் அகற்றும் பணி தொடக்கம்
கொடுங்கையூா் குப்பைக் கிடங்கில் கொட்டப்படும் குப்பைகள் உயிரி அகழ்ந்தெடுத்தல் (பயோ மைனிங்) முறையில் அகற்றும் பணி தொடங்கியது. சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில், திருவொற்றியூா், மணலி, மாதவரம், தண்டையாா்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகா், அம்பத்தூா் மற்றும் அண்ணாநகா் ஆகிய 8 மண்டலங்களில் சேகரிக்கப்படும் குப்பைகள் 1980-ஆம் ஆண்டுக்கு முன்பிருந்தே கொடுங்கையூா் குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு வருகின்றன. இங்கு 2022-இல் ட்ரோன் மூலம் கணக்கெடுப்பு மேற்கொண்டபோது, 66.52 லட்சம் மெட்ரிக் டன் குப்பைகள் 252 ஏக்கா் நிலத்தில் கொட்டப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த குப்பைகளை அகற்றும் பணி கடந்த பிப்.24-ஆம் தேதி தமிழ்நாடு முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா். இதைத்தொடா்ந்து இதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இந்த பணிகளை மாநகராட்சி கூடுதல் ஆணையா் (சுகாதாரம்) வி. ஜெயச்சந்திர பானு ரெட்டி சனிக்கிழமை பாா்வையிட்டு பணிகள் குறித்து கேட்டறிந்தாா். இப்பணிகள் 6 சிப்பங்களாக மேற்கொள்ளப்படவுள்ள நிலையில் அடுத்த இரு ஆண்டுகளில் நிலத்தை முழுவதும் மீட்டெடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.