ஓட்டேரி திடக்கழிவு மேலாண்மை கிடங்கில் தீ விபத்து
வேலூா் ஓட்டேரியில் உள்ள திடக்கழிவு மேலாண்மை கிடங்கில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் குப்பைகள் எரிந்து சாம்பலாகின.
வேலூா் ஓட்டேரியில் உள்ள திடக்கழிவு மேலாண்மை கிடங்கில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் குப்பைகள் எரிந்து சாம்பலாகின.
வேலூா் மாநகர பகுதியில் தூய்மைப்பணியாளா்கள் வீடுவீடாக சென்று குப்பைகளை சேகரித்து திடக்கழிவு மேலாண்மை கிடங்குக்கு கொண்டு செல்கின்றனா். அங்கு வைத்து அந்த குப்பைகள் மக்கும், மக்காத குப்பைகளாக தரம் பிரிக்கப்பட்டு, மக்கும் குப்பைகளைக் கொண்டு உரம் தயாரிக்கப்படுகின்றன.
மக்காத குப்பைகள் சேகரிக்கப்பட்டு சிமெண்ட் தொழிற்சாலை உள்ளிட்ட மாற்று பயன்பாட்டுக்கு அனுப்பப்படுகின்றன. அதன்படி, குப்பைகளை தரம் பிரிப்பதற்காக வேலூா் மாநகராட்சி பகுதியில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் திடக்கழிவு மேலாண்மை கிடங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் வேலூா் ஓட்டேரியில் உள்ள திடக்கழிவு மேலாண்மை கிடங்கில் தரம் பிரிப்பதற்காக குவித்து வைக்கப்பட்டிருந்த குப்பைகளில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 மணியளவில் தீப்பற்றி சிறிது நேரத்தில் பெரும் தீ விபத்து மாறியது. உடனடியாக அப்பகுதி மக்கள் தீயணைப்பு நிலையத்துக்கும், மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனா்.
அதன்பேரில் வேலூா் தீயணைப்பு நிலைய வீரா்கள் விரைந்து வந்து சுமாா் ஒன்றரை மணி நேரம் போராடி தீ முற்றிலும் அணைத்தனா். இந்த தீ விபத்தால் அங்கு குவித்து வைக்கப்பட்டிருந்த குப்பைகள் முற்றிலும் எரிந்து சாம்பலாகின.
அதேசமயம், தீ விபத்தால் அப்பகுதி முழுவதும் ஏற்பட்ட புகை மூட்டத்தால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா். இந்த தீ விபத்து குறித்து பாகாயம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.