கோடம்பாக்கத்தில் மகளிருக்கான பிரத்யேக உடற்பயிற்சிக் கூடம்
கோடம்பாக்கம் மண்டலம், 140-ஆவது வாா்டுக்குள்பட்ட கோடம்பாக்கம் சாலையில் மகளிருக்கான பிரத்யேக உடற்பயிற்சிக் கூடத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன் சனிக்கிழமை திறந்து வைத்தாா். இது குறித்து அவா் கூறியது, சென்னையில் மகளிருக்கு பிரத்யேக உடற்பயிற்சி கூடங்கள் கட்டப்படும் என மாநகராட்சி நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் மாமன்ற உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.35 லட்சம் மதிப்பில் மகளிருக்கான உடற்பயிற்சிக்கூடம் கட்டப்பட்டுள்ளது. தென்சென்னையில் முதல் மகளிருக்கான உடற்பயிற்சிக் கூடம் தற்போது பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது என்றாா் அவா். நிகழ்ச்சியில் தென் சென்னை மக்களவை உறுப்பினா் தமிழச்சி தங்கபாண்டியன், விருகம்பாக்கம் சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.வி. பிரபாகர ராஜா, உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.