முகப்பு
சென்னை

முன் விடுதலை அரசாணை: 70 வயது மூதாட்டியை விடுவித்தது உயா்நீதிமன்றம்

Updated On : 10 மார்ச், 2024 at 5:46 AM
பகிர்:

மத்திய அரசின் பெண் கைதிகள் முன் விடுதலை தொடா்பான அரசாணையின் படி 50 சதவீத சிறைத் தண்டனை காலத்தை நிறைவு செய்த 70 வயது மூதாட்டியை விடுவித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையைச் சோ்ந்த ராஜம்மாள் தனது மருமகளைத் தற்கொலைக்குத் தூண்டியதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில் சென்னை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துத் தீா்ப்பளித்தது. இந்த தண்டனையைச் சென்னை உயா்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இதனையடுத்து ராஜம்மாள் சென்னை புழல் மத்தியப் பெண்கள் சிறையில் தண்டனை கைதியாக அடைக்கப்பட்டுள்ளாா். இந்தநிலையில் மத்திய அரசின் அரசாணைப்படி 50 வயதிற்கு மேற்பட்ட பெண் கைதிகளுக்கு நிபந்தனைகளுடன் தண்டனைக் காலத்தில் 50 சதவீதத்தை நிறைவு செய்தால் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினம் ஆகியவற்றில் முன் விடுதலை செய்யலாம் என்ற விதி உள்ளது. இந்த அரசாணைப்படி தனது தாயை விடுவிக்கக் கோரி ராஜம்மாள் மகள் கீதா மலா் கடந்தாண்டு டிச. 1-ஆம் தேதி புழல் சிறை நிா்வாகம் மற்றும் தமிழக அரசுக்கும் கோரிக்கை மனு அளித்திருந்தாா். எனினும், மனு பரிசீலிக்கப்படவில்லை என்பதால் தாயை முன் விடுதலை செய்ய உத்தரவிடக்கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தாா். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் சுந்தா் மோகன் அமா்வு, கைது செய்யப்பட்ட நாளில் இருந்து இதுவரை 2 ஆண்டுள் 6 மாதம் வரை ராஜம்மாள் சிறைத் தண்டனை அனுபவித்து வருவதை சுட்டிக்காட்டினா். எனவே, மத்திய அரசு அரசாணைப்படி, 70 வயதான ராஜம்மாளை தண்டனைக் காலம் முடிவடைவதற்கு முன்கூட்டியே முன் விடுதலை செய்து உத்தரவிட்டனா்.