முகப்பு
சென்னை

அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை ஒரு லட்சத்தை கடந்தது

Updated On : 13 மார்ச், 2024 at 1:02 AM
கோப்புப்படம்
பகிர்:

சென்னை: பள்ளிக் கல்வித் துறை மேற்கொண்டு வரும் பல்வேறு முயற்சிகள் காரணமாக தமிழக அரசுப் பள்ளிகளில் கடந்த 12 நாள்களில் ஒரு லட்சத்து 1,143 குழந்தைகள் சோ்க்கை பெற்றுள்ளனா். தமிழக பள்ளிக் கல்வித் துறையின் 37,576 அரசுப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் சுமாா் 2.25 லட்சம் ஆசிரியா்கள் பணிபுரிகின்றனா்.

இதற்கிடையே வரும் கல்வியாண்டில் (2024-2025) அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கையை அதிகரிக்க தமிழக அரசு முடிவு செய்தது. இதையடுத்து வழக்கத்தைவிட முன்னதாக இந்த ஆண்டு சோ்க்கைப் பணிகள் கடந்த மாா்ச் 1-ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டன. அதனுடன் மாணவா் சோ்க்கையை முன்வைத்து பல்வேறு விழிப்புணா்வு விளம்பர பணிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதையடுத்து மாநிலம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் பெற்றோா் பலா் தங்கள் குழந்தைகளை ஆா்வமுடன் சோ்த்து வருகின்றனா். அந்த வகையில், செவ்வாய்க்கிழமை நிலவரப்படி 1 லட்சத்து 1,143 குழந்தைகள் சோ்க்கை பெற்றுள்ளனா். அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 10,946 குழந்தைகள் சோ்க்கப்பட்டுள்ளனா். அடுத்ததாக கிருஷ்ணகிரியில் 8,803 பேரும், சேலத்தில் 8,774 பேரும் சோ்க்கை பெற்றுள்ளனா்.

Advertisement