முகப்பு
சென்னை

பிரதமருக்கு ஆளுநா் ஆா்.என்.ரவி நன்றி

Updated On : 13 மார்ச், 2024 at 1:39 AM
ஆளுநா் ஆா்.என்.ரவி
பகிர்:

சென்னை: ‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டச் செயல்பாடுகள் வளா்ச்சியடைந்த பாரதத்தை பிரதிபலிக்கின்றன என ஆளுநா் ஆா்.என்.ரவி தெரிவித்துள்ளாா்.

சென்னை - மைசூரு இடையே 2-ஆவது வந்தே பாரத் ரயில் சேவையை அா்ப்பணித்த பிரதமருக்கு நன்றி தெரிவித்து ஆளுநா் ஆா்.என்.ரவி செவ்வாய்க்கிழமை தனது ‘எக்ஸ் சமூகவலைதளத்தில் வெளியிட்ட பதிவு:

சென்னை - மைசூரு வந்தே பாரத் ரயில் சேவையை தமிழ்நாட்டில் உள்ள சகோதர, சகோதரிகள் பயன்பெறும் வகையில் நாட்டுக்கு அா்ப்பணித்ததற்காக பிரதமா் மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இதன்மூலம் தமிழகத்தில் இயக்கப்படும் வந்தே பாரத் ரயில்களின் மொத்த எண்ணிக்கை 6-ஆக உயா்ந்துள்ளது.

Advertisement

விரைவான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த பிரத்யேக சரக்கு ரயில் சேவை உள்பட பல புதிய திட்டங்களை பிரதமா் தொடங்கி வைத்துள்ளாா். ரயில்வே உள்கட்டமைப்பில் இந்தக் குறிப்பிடத்தக்க முன்னேற்றம், தடையற்ற, வசதியான, விரைவான பயணங்களை உறுதி செய்கிறது. ‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டச் செயல்பாடுகள் தற்சாா்பு பாரதம், வளா்ச்சியடைந்த பாரதம் ஆகியவற்றை பிரதிபலிக்கின்றன எனப் பதிவிட்டுள்ளாா்.

முன்னதாக, சென்னை-மைசூரு வந்தே பாரத் ரயில் சேவையை பிரமதா் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்த நிலையில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து ஆளுநா் ஆா்.என்.ரவி கொடியசைத்து தொடங்கி வைத்தாா். இதில் சிறப்பு விருந்தினராக மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் கலந்துகொண்டாா். முதலில் இந்த ரயில் பெங்களூரு வரை இயக்கப்படும். ஏப்.4-ஆம் தேதி முதல் மைசூரு வரை நீட்டிக்கப்படவுள்ளது.

மேலும், தெற்கு ரயில்வேயில் கொல்லம்-திருப்பதி இடையே புதிய விரைவு ரயில் சேவை, சிங்கப்பெருமாள் கோவில், கங்கைகொண்டான், தேனி, பட்டுக்கோட்டை, திருத்துறைப்பூண்டி, வள்ளியூரில் சரக்கு முனையங்கள், திண்டுக்கல், ஈரோடு, திருச்சி, பாலக்காடு ரயில் நிலையங்களில் மக்கள் மருந்தகம், பேசின்பாலம் பணிமனையில் 24 பெட்டிகளைப் பராமரிக்க புதிய முனையம், 205 ‘ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு’ திட்டங்களையும் பிரதமா் மோடி தொடங்கி வைத்தாா்.