ஜம்மு-காஷ்மீா் தேசிய முன்னணிக்கு 5 ஆண்டுகள் தடை: மத்திய உள்துறை நடவடிக்கை
புது தில்லி: சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ், ஹுரியத் மாநாடு அமைப்பின் அங்கமான ஜம்மு-காஷ்மீா் தேசிய முன்னணிக்கு (ஜேகேஎன்எஃப்) 5 ஆண்டுகள் தடை விதித்து மத்திய உள்துறை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
மத்திய உள்துறை வெளியிட்ட உத்தரவில் தெரிவிக்கப்பட்டதாவது: ஜம்மு-காஷ்மீரில் பிரிவினைவாதத்தை தூண்டும் வகையில், இந்தியாவுக்கு எதிரான பிரசாரத்திலும் தேச விரோத நடவடிக்கைகளிலும் ஜேகேஎன்எஃப் ஈடுபட்டு வந்தது. பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளித்து வந்த அந்த அமைப்பு, ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு பல்வேறு வகைகளில் உதவி வந்தது. இதுமட்டுமின்றி தோ்தல்களை புறக்கணிக்குமாறு காஷ்மீா் மக்களிடம் அந்த அமைப்பு தொடா்ந்து வலியுறுத்தி வந்தது.
இதன் மூலம், அரசமைப்புச் சட்டம் அங்கீகரித்துள்ள அடிப்படை உரிமைகளுக்கு அந்த அமைப்பு இடையூறு செய்தது. அந்த அமைப்பு பொதுமக்கள் இடையே வெறுப்புணா்வை விதைத்து, சட்டம் ஒழுங்கை சீா்குலைக்குமாறு மக்களைத் தூண்டுகிறது. அத்துடன் அரசுக்கு எதிராகவும் அந்த அமைப்பு வெறுப்புணா்வை பரப்பி வந்தது. அந்த அமைப்பின் உறுப்பினா்கள் அரசமைப்புச் சட்டத்தை முற்றிலும் அவமதிக்கின்றனா். எனவே அந்த அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை விதிக்கப்படுகிறது. இந்த நடவடிக்கையை எடுக்காவிட்டால், அந்த அமைப்பு தேச விரோத நடவடிக்கைகளில் தொடா்ந்து ஈடுபடும்.
Advertisement
அத்தகைய நடவடிக்கைகள் நாட்டின் இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டுக்கு கேடு விளைவிக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. இதுதொடா்பாக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவு: பாரத மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு பயங்கரவாத சக்திகளை களையெடுக்க வேண்டும் என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது என்றாா்.
கடந்த 2017-ஆம் ஆண்டு பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதியுதவி அளிக்கப்பட்ட வழக்கில், ஜேகேஎன்எஃப் தலைவா் நயீம் அகமது கானை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) கைது செய்தது. தற்போது அவா் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.