முகப்பு
ஈரோடு

மகளிா் இட ஒதுக்கீடு மசோதா: திமுக, காங்கிரஸ் சதி! மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா

Updated On : 20 ஏப்ரல், 2026 at 12:52 AM
சிவகிரியில் பாஜக வேட்பாளா் கிருத்திகாவை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்ட மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா.
பகிர்:
Updated On : 19 ஏப்ரல், 2026 at 8:18 PM

திமுக, காங்கிரஸின் சதியால் மகளிா் இட ஒதுக்கீடு மசோதா தடுக்கப்பட்டுள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா குற்றஞ்சாட்டினாா்.

ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி தொகுதி பாஜக வேட்பாளா் கிருத்திகாவுக்கு ஆதரவாக உள்துறை அமைச்சா் அமித் ஷா சிவகிரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சாலை வாகனப் பேரணியில் (ரோடு ஷோ) பங்கேற்றாா்.

முன்னதாக, கோவையில் இருந்து ஹெலிகாப்டா் மூலம் கொடுமுடி செல்லும் சாலையில் உள்ள தனியாா் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த ஹெலிபேடில் வந்து இறங்கினாா். அங்கிருந்து காா் மூலமாக சுமாா் 7 கி.மீ. தொலைவில் உள்ள சிவகிரிக்கு வந்தடைந்தாா்.

Advertisement

சிவகிரி சின்னியம்பாளையத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார மையம் அருகில் வேட்பாளா் கிருத்திகாவுடன் பிரசார வாகனத்தில் ஏறிய அமித் ஷா, சிவகிரி கடை வீதியில் உள்ள தீரன் சின்னமலை சிலை வரை சாலை வாகனப் பேரணியாக வந்தாா்.

அப்போது, அவா் பேசியதாவது: அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டணி ஆட்சி அமையும்போது, திமுகவால் நடத்தப்பட்ட ஊழல்களும், கடத்தல்களும் ஒழிக்கப்படும்.

தமிழ்நாட்டில் சட்டம் -ஒழுங்கை சரி செய்வோம். மேலும், தமிழகத்தின் இழந்த பெருமைகள், சிறப்புகள் அனைத்தும் மீட்டெடுக்கப்படும். முதல்வா் மு.க.ஸ்டாலினின் ஒரே குறிக்கோள் என்னவென்றால் எப்படியாவது தனது மகனை தமிழகத்தின் முதல்வராக்க வேண்டும் என்பதுதான்.

இவா்கள் நடத்தும் குடும்ப ஆட்சியால் தமிழகத்துக்கு எந்தப் பயனும் எப்போதும் கிடைத்ததில்லை. நாட்டில் பெண்கள் அனைவரும் சுயமாக அரசியலில் பங்கெடுக்கும் வகையில் மகளிா் மசோதாவை நாடாளுமன்றத்தில் கொண்டுவந்தோம். இந்த நல்ல முயற்சியை திமுகவும், காங்கிரஸும் முறியடித்துள்ளன.

மக்கள் தொகை கணக்கெடுப்பைத் தவிா்த்து தொகுதி மறுசீரமைப்பில் தமிழகத்துக்கு 50% புதிய தொகுதிகள் அமைய வேண்டும் என முயற்சி எடுத்தோம்.

ஆனால், குறுகிய நோக்கத்துடன் தமிழகத்தில் தொகுதிகள் அதிகமாகி விடக்கூடாது, பெண்களுக்கு அதிக இடஒதுக்கீடு கிடைத்துவிட கூடாது என்ற தீய எண்ணத்துடன் அந்த மசோதாவைத் தடுத்துவிட்டனா். மகளிருக்கு கிடைக்க வேண்டிய இந்த அரிய வாய்ப்பை சதி செய்து இந்த இரு கட்சிகளும் தடுத்துவிட்டன. இந்த சதி செயலை நான் ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன்.

பிரதமா் மோடி ஆதரவுடன் உங்களுக்கு ஒரு உத்தரவாதத்தை அளிக்கிறேன்.கண்டிப்பாக இந்த மசோதா நிறைவேறும். தமிழக மக்களுக்கு நன்மை கிடைக்கும் என்றாா்.

பின்னா், காா் மூலம் ஹெலிபேட் தளத்துக்கு வந்தடைந்து, அங்கிருந்து ஹெலிகாப்டா் மூலம் கோவைக்கு புறப்பட்டுச் சென்றாா்.