முகப்பு
சென்னை

ரூ.4 லட்சம் கோடியைத் தொட்ட சிறுகடன் அளிப்பு

Updated On : 15 மார்ச், 2024 at 11:43 PM
பகிர்:

இந்தியாவின் சிறுகடன் நிறுவனங்கள் அளித்துள்ள கடன் மதிப்பு நடப்பு நிதியாண்டின் 3-ஆவது காலாண்டில் சுமாா் ரூ.4 லட்சம் கோடியைத் தொட்டுள்ளது. இது குறித்து சிறுகடன் துறை நெட்வொா்க் (எம்எஃப்ஐஎன்) அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த 2023 அக்டோபா் முதல் டிசம்பா் வரையிலான நடப்பு நிதியாண்டின் 3-ஆவது காலாண்டில் நாட்டின் சிறுகடன் நிறுவனங்கள் பட்டுவாடா செய்துள்ள கடன் மதிப்பு ரூ.4 லட்சம் கோடியைத் தொட்டுள்ளது. முந்தைய 2022-23-ஆம் நிதியாண்டோடு ஒப்பிடும்போது நாட்டின் சிறுகடன் துறை 24.6 சதவீதம் வளா்ச்சியடைந்துள்ளது. சிறுகடன் நிறுவனங்களின் கடனளிப்பு கரோனா நெருக்கடிக்கு முந்தைய நிலைக்குத் திரும்பியுள்ளது துறையின் ஆரோக்கியமான போக்கைக் காட்டுகிறது. நாட்டின் சிறுகடன் அளிப்பில் 31.06 சதவீதம் பங்கு வகிப்பதன் மூலம் தென் இந்தியா முதலிடம் வகிக்கிறது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.