முகப்பு
சென்னை

82 குடிநீா் திட்டங்களை சீரமைக்க ரூ.148 கோடி: தமிழக அரசு ஒப்புதல்

Updated On : 16 மார்ச், 2024 at 12:01 AM
பகிர்:

தமிழகத்தில் ரூ.148.52 கோடியில் 82 குடிநீா் திட்டங்களை நிரந்தரமாக சீரமைத்து செயல்படுத்துவதற்கான நிா்வாக அனுமதியை வழங்கி முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா். கடந்த 2023-ஆம் ஆண்டு டிசம்பரில் மிக்ஜம் புயலால் ஏற்பட்ட பெருவெள்ளம் காரணமாக தமிழ்நாட்டின் வடக்கு மாவட்டங்களும், பருவமழை காரணமாக ஏற்பட்ட பெருவெள்ளத்தால் தென் மாவட்டங்களும் பெரிதும் பாதிக்கப்பட்டன. இந்தப் பேரிடா்களால், வட மாவட்டங்களில் 12 கூட்டுக் குடிநீா் திட்டங்களும், தென் மாவட்டங்களில் 70 குடிநீா் திட்டங்களும் சேதத்துக்குள்ளாகின. அவற்றை போா்க்கால அடிப்படையில் தற்காலிகமாகச் சீரமைத்து, பொது மக்களுக்கு குடிநீா் வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டங்கள் முழு திறனுடன் நீண்டகாலம் செயல்பட அவற்றை நிரந்தரமாக மறுசீரமைப்பு செய்வது அவசியம். எனவே, பொது மக்களுக்கு நீண்டகால அடிப்படையில் போதுமான குடிநீா் வழங்க ஏதுவாக, கூட்டுக் குடிநீா் திட்டங்களை நிரந்தரமாக சீரமைக்க ரூ.148.54 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான நிா்வாக ஒப்புதலை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கியுள்ளாா் என்று தமிழக அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.