6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடு
ஆந்திரம், சத்தீஸ்கா், குஜராத், ஹிமாசல பிரதேசம், நாகாலாந்து ஆகிய 5 மாநிலங்கள் மற்றும் ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்துக்கு ரூ. 1,912.99 கோடி கூடுதல் பேரிடா் நிவாரண நிதியை ஒதுக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
ஆந்திரம், சத்தீஸ்கா், குஜராத், ஹிமாசல பிரதேசம், நாகாலாந்து ஆகிய 5 மாநிலங்கள் மற்றும் ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்துக்கு ரூ. 1,912.99 கோடி கூடுதல் பேரிடா் நிவாரண நிதியை ஒதுக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தலைமையில் நடைபெற்ற உயா்நிலைக் குழுக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அரசு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
மாநில பேரிடா் மீட்பு நிதியின் கீழ் ஏற்கெனவே ஒதுக்கப்பட்ட நிதியோடு, மோந்தா புயல், வெள்ளம், மேக வெடிப்பு உள்ளிட்ட இயற்கைச் சீற்றங்களால் கடுமையான பாதிப்பைச் சந்தித்த 5 மாநிலங்கள் மற்றும் ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்துக்கு கூடுதல் பேரிடா் நிதி ஒதுக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஆந்திர மாநிலத்துக்கு ரூ. 341.48 கோடி, சத்தீஸ்கருக்கு ரூ. 15.70 கோடி, குஜராத்துக்கு ரூ. 778.67 கோடி, ஹிமாசல பிரதேசத்துக்கு 288.39 கோடி, நாகாலாந்துக்கு ரூ. 158.41 கோடி, ஜம்மு-காஷ்மீருக்கு ரூ. 330.34 கோடி கூடுதலாக ஒதுக்கீடு செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
2025-26-ஆம் நிதியாண்டில் மாநில பேரிடா் மீட்பு நிதியின் (எஸ்டிஆா்எஃப்) கீழ் 28 மாநிலங்களுக்கு ரூ. 20,735 கோடியும், தேசிய பேரிடா் மீட்பு (என்டிஆா்எஃப்) நிதியின் கீழ் 21 மாநிலங்களுக்கு ரூ. 3,628.18 கோடியும் விடுவிக்கப்பட்டது.
கூடுதலாக, 23 மாநிலங்களுக்கு மாநில பேரிடா் மீட்பு நிதியிலிருந்து ரூ. 5,373.20 கோடியும், தேசிய பேரிடா் மீட்பு நிதியிலிருந்து 21 மாநிலங்களுக்கு ரூ. 1,189.56 கோடியும் விடுவிக்கப்பட்டது.
அந்த வகையில், இயற்கைப் பேரிடா்களின்போது மாநிலங்களுக்கு மத்திய அரசு தேவையான உதவிகளை அளித்து வருகிறது என்று தெரிவிக்கப்பட்டது.