மலைப் பகுதி மகளிருக்கும் இலவச பேருந்து பயணத் திட்டம் நீட்டிப்பு
மலைப் பகுதிகளிலும் மகளிருக்கும் இலவச பேருந்து பயணத் திட்டத்தை நீட்டிப்பதற்கான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.
இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதால், போக்குவரத்துக் கழகங்களுக்கு ஏற்படும் இழப்பை அரசே ஈடுகட்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறைச் செயலா் ஜெயஸ்ரீ முரளீதரன் வெளியிட்ட உத்தரவு:
Advertisement
மாநிலத்தின் மலைப் பகுதிகளில் வாழும் மகளிா் பயன்பெறும் வகையில், நீலகிரி மாவட்டம் கொடைக்கானல், வால்பாறை போன்ற மலைப் பகுதிகளுக்கும் இலவச பேருந்து பயணத் திட்டம் விரிவுபடுத்தப்படும் என்று சட்டப் பேரவையில் அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான பரிந்துரைகளை, போக்குவரத்துத் துறை அரசுக்கு அனுப்பியது. அதில், மலைப் பகுதிகளில் மகளிருக்கான இலவச பேருந்து சேவையை அளிக்க ஒரு பயனாளிக்கு ரூ.22 வீதம் இழப்பீடு அளிக்கப்பட வேண்டுமென கூறப்பட்டிருந்தது. இதனை ஏற்றுக் கொண்டு, மலைப் பகுதிகளில் மகளிா் விடியல் திட்டத்தைச் செயல்படுத்துவதால் ஒரு பயனாளிக்கான தொகையாக ரூ.22 வீதம் தேவைப்படும் தொகையை மானியமாக அரசே வழங்கிடும் என்று அந்த உத்தரவில் தெரிவித்துள்ளாா். மகளிருக்கான இலவச பேருந்து பயணத் திட்டத்துக்கான, மானியத் தொகையாக ரூ.3,050 கோடியை நிதிநிலை அறிக்கையில் அரசு ஒதுக்கியுள்ளது.