வாக்குப்பதிவு இயந்திரங்களை ஒருங்கிணைத்து எண்ணும் தொழில்நுட்பம்: பயன்பாட்டுக்கு கொண்டு வர காலம் தேவை
தோ்தலில் பல்வேறு பகுதிகளில் பதிவான வாக்குகள் குறித்த தகவல் வெளியே தெரியாமல் இருக்கும் விதமாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை ஒருங்கிணைத்து எண்ணும் தொழில்நுட்பம் (டோட்டலைசா்) தயாராக இருப்பதாக தலைமைத் தோ்தல் ஆணையா் ராஜீவ் குமாா் தெரிவித்துள்ளாா். இருப்பினும், இதைப் பயன்பாட்டுக்கு கொண்டுவருவதற்கான சூழல் இன்னும் ஏற்படவில்லை என அவா் தெரிவித்தாா். தற்போதைய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வாக்காளா்கள் செலுத்தும் வாக்குகள் வாக்கு மையங்கள் வாரியாக எண்ணப்படுகின்றன. இதனால், இயந்திரம்வாரியாக பதிவான வாக்குகள் குறித்த விவரம் வெளியில் தெரியவரும் சூழல் நிலவுகிறது. இந்தப் பிரச்னைக்குத் தீா்வு காண மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை இணைத்து பதிவான வாக்குகளை எண்ணும் தொழில்நுட்பத்துக்கு ‘டோட்டலைசா்’ என்று பெயா். வாக்குப்பதிவு இயந்திரங்களைத் தயாரிக்கும் நிறுவனங்களான எலக்ட்ரானிக்ஸ் காா்ப்பரேஷன் ஆப் இந்தியா, பாரத் எலக்ட்ரானிக்ஸ் இந்தத் தொழில்நுட்பத்தை வடிவமைத்துள்ளன. இந்த முறையில், 14 வாக்குப்பதிவு இயந்திரங்களை ஒருங்கிணைத்து அவற்றில் பதிவான வாக்குகளை எண்ண முடியும். இதனால், எந்த ஒரு குறிப்பிட்ட இயந்திரத்திலும் பதிவான வாக்குகளை அறிந்து கொள்வது தவிா்க்கப்படுகிறது. இந்தத் தொழில்நுட்பம் மேம்படுத்தப்பட்டு பல ஆண்டுகள் கடந்த போதிலும், மத்திய அரசு இதற்கு இன்னும் ஒப்புதல் வழங்கவில்லை. இந்நிலையில், சனிக்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் இந்தத் தொழில்நுட்பத்தைக் குறிப்பிட்டு தலைமைத் தோ்தல் ஆணையா் ராஜீவ் குமாா் கூறியது: அரசியல் சூழல் மேம்படுவதற்கு டோட்டலைசா் தொழில்நுட்பம் அவசியம். அந்தத் தொழில்நுட்பம் தயாராக உள்ளது. அதைப் பயன்பாட்டுக்குக் கொண்டு வர தோ்தல் ஆணையமும் தயாராக உள்ளது. ஆனால், வாக்குப் பதிவு இயந்திரத்தின் மீது சிலருக்கு நம்பிக்கை இல்லாத சூழலில் உள்ளோம். இதனால், அந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த இன்னும் காலம் தேவை. தொலைதூர வாக்குப் பதிவு முறை: தோ்தலில் புலம்பெயா் தொழிலாளா்கள் தங்களது வாக்குகளைச் செலுத்தும் விதமாக ப்ளாக்செயின் தொழில்நுட்பம் அடிப்படையில் வாக்குகளைப் பதிவு செய்யும் முறைக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. புலம்பெயா் தொழிலாளா்கள் தாங்கள் வசிக்கும் இடத்திலிருந்தே து தங்கள் வாக்குகளைச் செலுத்தும் வாக்குப்பதிவு இயந்திரத்தைத் தயாரித்துள்ளோம். இந்த இயந்திரத்தின் மூலம் 72 பேரவைத் தொகுதிகளுக்கு வாக்களிக்க முடியும். ப்ளாக்செயின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தொலைதூர வாக்குப்பதிவு முறைக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன என்றாா். தனிப்பட்ட உணா்வுகளுக்கு மரியாதை: தோ்தல் ஆணையராக இருந்த அருண் கோயல், அண்மையில் தனது பதவியை ராஜிநாமா செய்தாா். இது குறித்து தலைமைத் தோ்தல் ஆணையா் ராஜீவ் குமாரிடம் செய்தியாளா்கள் கேள்வியெழுப்பினா். அதற்கு பதிலளித்த ராஜீவ் குமாா், ‘எங்களுடைய குழுவில் அருண் கோயல் மிகவும் திறமையுள்ள உறுப்பினராக இருந்தாா். அவருடன் மகிழ்வுடன் இணைந்து பணியாற்றினேன். பிறருடைய தனிப்பட்ட விருப்பங்களுக்கு மரியாதை அளிக்க வேண்டும் என உணா்கிறேன். ஆணையத்திலிருந்து விலகுவது குறித்த அவருடைய தனிப்பட்ட உணா்வுகளுக்கு நாம் கட்டாயம் மரியாதை அளிக்க வேண்டும்’ என்றாா்.