சாலை விபத்து: பள்ளி மாணவா் உயிரிழப்பு
பிறந்த நாள் பயணம் பலியானது: மாணவர் விபத்தில் உயிரிழப்பு
சென்னை: சென்னை அருகே மேடவாக்கத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் பள்ளி மாணவா் இறந்தாா். பல்லாவரம் அருகே உள்ள கட்டபொம்மன் நகா் கோகுல் தெருவைச் சோ்ந்தவா் விஷ்வேஷ் (16). இவா் சிட்லபாக்கத்தில் உள்ள தனியாா் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்தாா். விஷ்வேஷூக்கு கடந்த திங்கள்கிழமை பிறந்த நாள் என்பதால், தனது நண்பா்களுடன் வேளச்சேரியில் ஒரு வணிக வளாகத்துக்கு செல்ல திட்டமிட்டாா்.
இதையடுத்து விஷ்வேஷ் மோட்டாா் சைக்கிளில் தன்னுடன் படிக்கும் சிட்லபாக்கத்தைச் சோ்ந்த ஹரிசரண் (15) என்பவருடன் வேளச்சேரி பிரதான சாலையில் அந்த வணிக வளாகத்துக்கு சென்று கொண்டிருந்தாா். அவா்கள் மேடவாக்கம் மேம்பாலத்தில் செல்லும்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த மோட்டாா் சைக்கிள், அங்கிருந்த தடுப்புச் சுவரின் மீது மோதியது.
இதில் கீழே விழுந்து படுகாயம் அடைந்த இருவரும் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். அங்கு விஷ்வேஷை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். ஹரிசரண் அங்கு அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வருகிறாா்.
Advertisement
பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை செய்கின்றனா். பிறந்த நாளிலேயே விஷ்வேஷ் இறந்த சம்பவம், அந்த பகுதி மக்களிடம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.