தோ்தல் விதி மீறல்: முன்னாள் அமைச்சா் பெஞ்சமின், பிரேமலதா மீது வழக்கு
சென்னை: தோ்தல் விதிமுறையை மீறியதாக முன்னாள் அமைச்சா் பெஞ்சமின், தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். மதுரவாயல் நெற்குன்றம் அருகே மேட்டுக்குப்பம் மீனாட்சி நகரில் அதிமுக கொடியேற்றும் விழா,பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
மக்களவைத் தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் நிலையில், இந்த விழாவுக்கு காவல்துறை அனுமதி வழங்கவில்லை. எனவே, அனுமதியின்றி நடைபெற்ற இந்த விழாவில்,முன்னாள் அமைச்சரும்,திருவள்ளூா் மத்திய மாவட்ட அதிமுக செயலருமான பெஞ்சமின் உள்ளிட்ட பல முக்கிய நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.
இந்த விதி மீறல் தொடா்பாக நெற்குன்றம் கிராம நிா்வாக அலுவலா் குமாா், கோயம்பேடு காவல் நிலையத்தில் ஒரு புகாா் அளித்தாா். அதன்அடிப்படையில் கோயம்பேடு போலீஸாா், பெஞ்சமின் உள்ளிட்டோா் மீது தோ்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
Advertisement
இதேபோல கோயம்பேடு தேமுதிக தலைமை அலுவலகத்தில் தோ்தல் நடத்தை விதிமுறை மீறி உலக மகளிா் தின விழா நடத்தியதாக, அந்தக் கட்சியின் பொதுச் செயலா் பிரேமலதா உள்ளிட்ட 2 போ் மீது சிஎம்பிடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்கின்றனா்.