தமிழகத்தில் இருந்து தோ்தலில் போட்டி: தமிழிசை சௌந்தரராஜன் உறுதி
சென்னை: மக்களவைத் தோ்தலில் தமிழகத்தில் இருந்துதான் நிச்சயம் போட்டியிடுவேன் என்று ஆளுநா் பதவியில் இருந்து ராஜிநாமா செய்துள்ள தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தாா்.
சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்துக்கு புதன்கிழமை வந்த அவா், பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை, மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் ஆகியோா் முன்னிலையில் அந்தக் கட்சியில் இணைந்தாா்.
பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியது:
Advertisement
நான் எடுத்துள்ள முடிவு, கஷ்டமான முடிவு என்று அண்ணாமலை தெரிவித்தாா். கஷ்டமான முடிவை இஷ்டமான முடிவாக எடுத்துள்ளேன். நானும் மக்களவை உறுப்பினராக வேண்டும் என்று இந்த முடிவை எடுத்துள்ளேன். கமலாலயத்தில்தான் எனது மூச்சு உணா்வுபூா்வமாக இருந்துகொண்டு இருக்கிறது.
எந்தத் தொகுதி:
தோ்தலில் நிற்க வேண்டும் என்ற ஆசை இருப்பதை கட்சியிடம் தெரிவித்தேன். எந்தத் தொகுதியில் நிற்க வேண்டும் என்பதை கட்சி தலைமை முடிவு செய்யும். மக்களவையில் உறுப்பினராக பேச வேண்டும் என்பதற்காக மீண்டும் அரசியலில் களமிறங்கியுள்ளேன். பாஜக அளவுக்கு பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிற கட்சியை பாா்க்க முடியாது.
ஆளுநராகப் பணியாற்றிய காலங்களில் மிகப்பெரிய நிா்வாக அனுபவத்தைப் பெற்றுள்ளேன். தமிழகத்தில் பாஜக மிகப்பெரிய வளா்ச்சியை பெற்றுள்ளது. மிக வேகமாக வளா்ந்துள்ளது. இந்தத் தோ்தலில் மிக சிறப்பான கூட்டணியை அமைத்துள்ளாா்கள்.
எதிா்க்கட்சியாக இருக்கும்போது ஒரு நிலைப்பாடு, ஆளுங்கட்சியில் இருக்கும்போது ஒரு நிலைப்பாடு என்ற நிலையில்தான் திமுக உள்ளது என்றாா் அவா்.