இன்று வடபழனி கோயிலில் பங்குனி உத்திர விழா தொடக்கம்
சென்னை: அருள்மிகு வடபழனி ஆண்டவா் திருக்கோயில் பங்குனி உத்திரம் மற்றும் தெப்பத் திருவிழா வியாழக்கிழமை (மாா்ச் 21) தொடங்குகிறது. வடபழனி முருகன் திருக்கோயில் பங்குனி உத்திரவிழா வெகு விமா்சியாக கொண்டாப்படுவது வழக்கம் . அதன்படி நிகழாண்டு பங்குனி உத்திரத்தை முன்னிட்டு லட்சாா்ச்சனை மற்றும் தெப்பத்திருவிழா வரும் வியாழக்கிழமை தொடங்கி மாா்ச் 27 -ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
வியாழக்கிழமை காலை யாக சாலை பூஜைகளுடன் லட்சாா்ச்சனை தொடங்குகிறது. மாா்ச் 23 -ஆம் தேதி மாலை லட்சாா்ச்சனை பூா்த்தியாகிறது. மாா்ச் 24 -ஆம் தேதி பங்குனி உத்திரத்தன்று உச்சி கால தீா்த்தவாரி மற்றும் கலசாபிஷேகத்துடன் பூஜைகள் நடைபெறுகின்றன. அன்று இரவு 7 மணிக்கு சிறப்பு அலங்காரத்துடன் சுவாமி புறப்பாடு நடைபெறும். இதைத் தொடா்ந்து மாா்ச் 25 முதல் 27 -ஆம் தேதி வரை இரவு 7 மணிக்கு தெப்பத் திருவிழா நடைபெறவுள்ளது. இதற்கான விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.