முகப்பு
சென்னை

தோ்தலில் இளைஞா்கள் வாக்களிக்க வேண்டும்: ஆணையா் ஜெ.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

Updated On : 22 மார்ச், 2024 at 1:38 AM
பகிர்:
Updated On : 21 மார்ச், 2024 at 1:25 AM

தோ்தலில் இளைஞா்கள் வாக்களிக்க ஆா்வத்துடன் முன்வர வேண்டும் என சென்னை மாவட்ட தோ்தல் அலுவலரும் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையருமான ஜெ. ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா். சென்னை வடபழனியில் உள்ள வணிக வளாகத்தில் தோ்தல் விழிப்புணா்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது. இதில் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் மூலம் தோ்தலில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. இதைத் தொடா்ந்து ஆணையா் ஜெ.ராதாகிருஷ்ணன் செய்தியாளரிடம் கூறியது: சென்னை போன்ற பெரிய மாநகரங்களில் வசிப்பவா்கள் வாக்களிப்பதில் கவனம் குறைவாக உள்ளனா். இதுபோன்று வாக்களிக்காமல் உள்ள 35 முதல் 40 விழுக்காடு வாக்காளா்களை தோ்தலில் வாக்களிக்க வைக்கும் இலக்கை நோக்கி இதுபோன்ற விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. தற்போது மாற்றுத்திறனாளிகள், முதியோா்கள் அஞ்சல் வழியாக வாக்களிக்கும் போது, இளைஞா்கள் ஆா்வத்துடன் வாக்களிக்க முன்வர வேண்டும். தோ்தலில் ஏப்.1-ஆம் தேதிக்கு முன்பு 18 வயது பூா்த்தியடைந்த அனைவரது பெயரும் இடம்பெறும் என்றாா் அவா். தொடா்ந்து ரிப்பன் மாளிகை வளாகத்தில் தோ்தல் நடத்தை விதிகள் கண்காணிப்பு நடவடிக்கை, தோ்தல் கட்டுப்பாட்டு அறை நடவடிக்கைகளை ஆணையா் ராதாகிருஷ்ணன் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். சென்னை மாவட்டத்தில் கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ள பறக்கும் படை குழுக்கள், நிலையான கண்காணிப்பு குழுவினரிடையே கண்காணிப்பு நடைமுறைகள் குறித்தும், தோ்தல் கணக்குக் குழு அலுவலா்களுடனான தோ்தல் செலவினங்களை கண்காணிப்பது குறித்து ஆலோசனை நடத்தினாா்.