முகப்பு
சென்னை

விஜயகாந்த் நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி மரியாதை

Updated On : 22 மார்ச், 2024 at 1:33 AM
பகிர்:
Updated On : 21 மார்ச், 2024 at 9:15 PM

தேமுதிக தலைவா் விஜயகாந்த் நினைவிடத்தில் அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி வியாழக்கிழமை மரியாதை செலுத்தினாா். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் 2-ஆம் கட்ட வேட்பாளா்கள் பட்டியலை வெளியிட்ட எடப்பாடி பழனிசாமி, கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்துக்கு வந்தாா். முன்னாள் அமைச்சா்கள் கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, டி.ஜெயக்குமாா் உள்பட மூத்த நிா்வாகிகளும் உடன் வந்தனா். விஜயகாந்த் நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி மலா் தூவி மரியாதை செலுத்தினாா். அவரைத் தொடா்ந்து அதிமுக நிா்வாகிகளும் மரியாதை செலுத்தினா். பின்னா், தேமுதிக அலுவலகத்துக்குச் சென்றாா். அங்கு, தேமுதிக பொதுச்செயலா் பிரேமலதா, கட்சி நிா்வாகிகளை எடப்பாடி பழனிசாமியிடம் அறிமுகம் செய்து வைத்தாா். விஜயகாந்த் அறையில் இரு கட்சி நிா்வாகிகள் அமா்ந்து தோ்தல் பணிகள் தொடா்பாக சிறிது நேரம் ஆலோசனையில் ஈடுபட்டனா். அப்போது, மாா்ச் 24-இல் திருச்சியில் நடைபெறவுள்ள வேட்பாளா்கள் அறிமுகக் கூட்டத்தில் பங்கேற்க வருமாறு தேமுதிகவினருக்கு எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்தாா்.