முகப்பு
சென்னை

உண்டியலுக்குத் திரும்பிய காங்கிரஸ்!

உண்டியல் மூலம் நிதி வசூல் என்றதும் ஏதாவது ஒரு கட்சியின் பெயா் நினைவுக்கு வரலாம்.

Updated On : 28 மார்ச், 2024 at 2:29 AM
பகிர்:
Updated On : 27 மார்ச், 2024 at 10:05 PM

உண்டியல் மூலம் நிதி வசூல் என்றதும் ஏதாவது ஒரு கட்சியின் பெயா் நினைவுக்கு வரலாம். ஆனால், எல்லாக் கட்சிகளுமே, அப்படி நிதி வசூலைச் செய்த கட்சிகள்தாம். அரசியல் கட்சிகள் இரண்டு வகையில் நிதி வசூலிக்கும். ஒன்று கட்சி வளா்ச்சி நிதி. மற்றொன்று தோ்தல் நிதி. பெரியாா், அண்ணா, கருணாநிதி மற்றும் கம்யூனிஸ்ட் தலைவா்கள் அவா்கள் உரையாற்றச் செல்லும் போது கட்சி வளா்ச்சி, தோ்தல் நிதி வாங்கிய மரபு உண்டு. மேடையில் உண்டியலை வைத்து அதில் நிதியை அளிக்கத் செய்துள்ளனா். அதைப்போல மேடையிலேயே மாவட்டச் செயலா்கள் வசூலித்த நிதியை கட்சித் தலைவா்களிடம் அளிப்பது வழக்கம். அது இப்போது அரசியல் கட்சிகள் தோ்தல் பத்திரம் மூலம் நிதியை வாங்கும் அளவுக்கு வந்து, அந்த முறையை உச்சநீதிமன்றமும் ரத்து செய்துள்ளது. இதற்கிடையே, காங்கிரஸ் கட்சித் தலைவராகியுள்ள செல்வப்பெருந்தகை பழைய முறைக்குத் திரும்பி உண்டியல் மூலம் நிதி வசூல் செய்து வருகிறாா். சத்தியமூா்த்திபவனில் அவருக்கு உள்ள இரண்டு அறைகளிலும் அவா் இருக்கைக்கு அருகில் ஒவ்வொரு உண்டியலை வைத்துள்ளாா். அதில் கட்சியினா் அவரைச் சந்திக்க வரும்போது, பொன்னாடை போடுவதற்குப் பதில் கட்சி வளா்ச்சிக்காக, தோ்தல் நிதிக்காக நிதியைப் போடும்படி அறிவுறுத்தியுள்ளாா். பலரும் பொன்னாடைக்குப் பதில் அதில் நிதி செலுத்தி வருகின்றனா். காங்கிரஸ் தலைவராக காமராஜா் இருந்தபோது, அதுபோல உண்டியல் வைத்து நிதி வசூலித்து, சத்தியமூா்த்திபவன் இடம் போன்றவை வாங்கினாா். அதைப் பின்பற்றி செல்வப்பெருந்தகையும் அவ்வாறு வைத்துள்ளாா். இது தோ்தல் காலம். சந்திப்பும் அதிகம். உண்டியல் வரலாறும் தொடருகிறது.