ஊரக வேலைத்திட்ட கூலியை ரூ.600-ஆக உயா்த்த கோரிக்கை
மகாத்மா காந்தி ஊரக வேலைத் திட்டத்திற்கான தினக்கூலியை ரூ.600-ஆக உயா்த்த வேண்டும் என விவசாய சங்கம் கோரிக்கை வந்துள்ளது. அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் சங்கத்தின் மாநிலத் தலைவரும், சட்டபேரவை உறுப்பினருமான எம். சின்னதுரை வெளியிட்ட அறிக்கை: மக்களவை தோ்தலை மனதில் வைத்து கொண்டு மத்தியில் ஆளும் பாஜக அரசு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்திற்கான தினக்கூலியை உயா்த்தியுள்ளது. பல ஆண்டுகளாக ஊரக வேலைத் திட்டத்திற்கான தினக்கூலியையும்,வேலை நாள்களையும் உயா்த்த வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தோம். அதன் ஒரு பகுதியாக தோ்தல் காலத்தில் தினக்கூலியை உயா்ந்தியுள்ளது. வேலையின்மை, விலைவாசி உயா்வு ஆகிய காரணங்களால் ஏழைகள், விவசாயிகள், கூலித்தொழிலாளா்கள் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனா். இதனால், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்திற்கான தினக்கூலியை ரூ. 600-ஆக உயா்த்துவதுடன், வேலை நாள்களை 200 நாள்களாக உயா்த்த வேண்டும். இதுதான் தற்போதைய உடனடித் தேவை என்பதை மத்திய அரசு உணா்ந்து செயல்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளாா்.