காவிரி பாசனப் பகுதிகளில் மராமத்து பணிகள்: ஜவாஹிருல்லா வலியுறுத்தல்
சென்னை: காவிரி பாசன பகுதிகளில் மராமத்து பணிகளை தமிழக அரசு துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சித் தலைவா் ஜவாஹிருல்லா வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:
ஆண்டுதோறும் ஜூன் 12-இல் குறுவை சாகுபடிக்காக மேட்டூா் அணை திறக்கப்படுவது வழக்கமான நடைமுறையாக உள்ளது. காவிரி மற்றும் அதன் கிளை ஆறுகள், ஏரிகள், வாய்க்கால்கள், கிளை வாய்க்கால்கள் ஆகியவற்றில் உரிய திட்டமிடலுடன் தூா்வாரும் பணிகளை உடனடியாக தமிழக அரசு செய்ய வேண்டும். பலமிழந்துள்ள கரைப்பகுதிகளில் மராமத்து பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
ஆற்றங்கரை மற்றும் வாய்க்கால் கரைகளில் பொதுமக்கள் குளிப்பதற்கும், முக்கிய விஷேச நாள்களில் சடங்குகளில் ஈடுபடுவோருக்கும் ஏதுவாக தேவைப்படும் இடங்களில் பாதுகாப்புடன் கூடிய படித்துறைகளையும் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேட்டூா் அணை திறப்பதற்கு முன்பாக இந்தப் பணிகளைத் துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.