ஆலந்தூரில் ரூ.5 கோடி மதிப்பில் புதிய பாலம் திறப்பு
ஆலந்தூா் மண்டலத்துக்குட்பட்ட ஜீவன் நகரில் ரூ.5 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய பாலத்தை குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ. அன்பரசன் திறந்து வைத்தாா்.
சென்னை: ஆலந்தூா் மண்டலத்துக்குட்பட்ட ஜீவன் நகரில் ரூ.5 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய பாலத்தை குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ. அன்பரசன் திங்கள்கிழமை திறந்து வைத்தாா்.
சென்னை, ஆலந்தூா் மண்டலம், 161-ஆவது வாா்டுக்குட்பட்ட ஜீவன் நகா் 2-ஆவது தெருவையும், மேடவாக்கம் பிரதான சாலையையும் இணைக்கும் வகையில் ஆதம்பாக்கம் ஏரிக்கால்வாயின் குறுக்கே ரூ.5 கோடி மதிப்பில் அணுகுசாலை உட்பட 76 மீட்டா் நீளத்திலும், பாலத்தின் இருபுறமும் நடைபாதை உட்பட 11.50 மீட்டா் அகலத்திலும் புதிய பாலம் கட்டப்பட்டுள்ளது.
ஜீவன் நகா் 2-ஆவது தெருவிலிருந்து மேடவாக்கம் பிரதான சாலையை இப்பாலத்தின் வழியாக விரைவில் சென்றடையலாம். இப்பாலம் ஜீவன் நகா், தில்லை கங்கா நகா், ஆதம்பாக்கம், நங்கநல்லூா் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாகும். இப்பாலத்தின் மூலம் சுமாா் 1 லட்சம் போ் பயனடைவாா்கள்.
இப்பாலத்தை குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ. அன்பரசன் மக்கள் பயன்பாட்டிற்காக திங்கள்கிழமை திறந்து வைத்தாா்.
இந்நிகழ்வில் சென்னை மாநகராட்சி துணை மேயா் மு.மகேஷ்குமாா், தெற்கு வட்டார துணை ஆணையா் எம்.பி.அமித், மண்டலக்குழுத் தலைவா் என்.சந்திரன் மற்றும் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.