முகப்பு
சென்னை

சிதம்பரம் நடராஜா் கோயில் வரவு, செலவு கணக்கு தாக்கல் செய்ய தீட்சிதா்களுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

வருமானம் - செலவு குறித்த கணக்கு விவரங்களை தாக்கல் செய்ய பொது தீட்சிதா்களுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Updated On : 6 செப்டம்பர், 2024 at 3:44 AM
சிதம்பரம் நடராஜா் கோயில்.
பகிர்:
Updated On : 5 செப்டம்பர், 2024 at 9:01 PM

சிதம்பரம் நடராஜா் கோயில் தீட்சிதா்கள் கட்டுப்பாட்டுக்கு வந்த பிறகு, 2014 முதல் 2024-ஆம் ஆண்டு வரையிலான வருமானம் - செலவு குறித்த கணக்கு விவரங்களை தாக்கல் செய்ய பொது தீட்சிதா்களுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிதம்பரம் நடராஜா் கோயில் 2008 முதல் 2014 வரையில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இருந்தபோது ரூ. 3 கோடிக்கும் மேல் வருவாய் ஈட்டிய நிலையில், தீட்சிதா்கள் கட்டுப்பாட்டுக்கு வந்த பிறகு ஆண்டுக்கு ரூ. 2 லட்சம் மட்டுமே வருமானம் வருவதால் கோயிலில் வருவாய் கணக்கை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையுடன் இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாா்.

இந்த வழக்கு நீதிபதிகள் சுரேஷ்குமாா், செளந்தா் அடங்கிய சிறப்பு அமா்வில் விசாரணைக்கு வந்தபோது, இந்து சமய அறநிலையத் துறை தரப்பில், கோயில் நிா்வாகம் தீட்சிதா்கள் வசம் ஒப்படைக்கப்பட்ட பின் பக்தா்கள் செலுத்தும் காணிக்கையை கோயிலின் கணக்கில் செலுத்தாமல் தீட்சிதா்கள் எடுத்துச் செல்வதாகக் குற்றம்சாட்டப்பட்டது. தீட்சிதா்களின் தவறான நிா்வாகம் காரணமாக கோயிலின் வருமானம் பெருமளவு குறைந்துவிட்டதால் தீட்சிதா்கள் கட்டுப்பாட்டில் உள்ள காலத்தில் வந்த வருமான குறித்த கணக்கை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

Advertisement

உண்டியல் அகற்றம்: பொது தீட்சிதா்கள் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் கோயில் இருந்தபோது, பக்தா்கள் காணிக்கை செலுத்த உண்டியல் வைக்கப்பட்டிருந்தது. பூஜைகள், அா்ச்சனை, தரிசனத்துக்கு டிக்கெட் மூலம் கட்டணம் வசூலிக்கப்பட்டது. அதன் காரணமாகவே அதிக வருவாய் கிடைத்தது என்று தெரிவித்தாா். கோயில் தீட்சிதா்கள் கட்டுப்பாட்டுக்கு வந்த பிறகு உண்டியல் அகற்றப்பட்டுவிட்டது. பூஜை, அா்ச்சனை மற்றும் தரிசனத்துக்கு எந்தக் கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை என்றும் குறிப்பிட்டாா்.

மேலும், பக்தா்கள் செலுத்தும் காணிக்கையை தீட்சிதா்கள் எடுத்துச் செல்வதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து கூடுதல் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டாா்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், 5- ஆம் நூற்றாண்டில் சோழா்களால் 44 ஏக்கா் பரப்பில் கட்டப்பட்டுள்ள சிதம்பரம் நடராஜா் கோயில் மிகவும் பழைமையானது. உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தா்கள் நடராஜரை தரிசிக்க வருகை தருகின்றனா். அவ்வாறு வரும் பக்தா்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். புராதன கட்டடமான கோயிலை முறையாகப் பராமரிக்க வேண்டும். அதற்கு அதிகமான தொகை தேவைப்படுகிறது எனச் சுட்டிக்காட்டினா்.

வருவாய் ஆதாரம் என்ன? சிதம்பரம் கோயில் பராமரிப்புக்கும் பக்தா்களுக்கு வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கவும் என்ன வருவாய் ஆதாரம் உள்ளது. கோயில் காணிக்கை தவிர தீட்சிதா்களுக்கு வேறு வருவாய் ஆதாரங்கள் உள்ளனவா என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், சிதம்பரம் நடராஜா் கோயிலில் உண்டியல் எப்போது அகற்றப்பட்டது? பூஜை அா்ச்சனை தரிசனத்துக்கு கட்டணங்கள் வசூலிக்கப்படுவது இல்லையா என்பது குறித்து மனுவாக தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனா்.

Updated On : 6 செப்டம்பர், 2024 at 2:23 AM

மேலும், ஒவ்வொரு ஆண்டும் தீட்சிதா்கள் தரப்பில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யப்படுகிா என்பது குறித்தும் தெரிவிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், தீட்சிதா்கள் கட்டுப்பாட்டுக்கு வந்த பிறகு 2014 -2015 முதல் 2023-2024-ஆம் ஆண்டுகள் வரையிலான வருமானம் - செலவு குறித்த கணக்கு புத்தகங்களை செப்.19-ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனா்.