மாசாணி அம்மன் கோயில் நிதி விவகாரம்: அறநிலையத் துறைக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு
மாசாணி அம்மன் கோயில் நிதி விவகாரம்: அறநிலையத் துறைக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு
ஆனைமலை மாசாணி அம்மன் கோயிலுக்குச் சொந்தமான நிதியைப் பயன்படுத்த முடிவெடுப்பதற்கும் முன்பு சட்ட விதிகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என இந்துசமய அறநிலையத்துறைக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரத்தை சோ்ந்த பாஸ்கா் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், கோவை மாவட்டம் ஆனைமலையில் மாசாணி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலின் தக்காராக ராஜ்குமாா் என்பவரை நியமித்து இந்துசமய அறநிலையத் துறை கடந்த ஜன.14-ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். மேலும், கோயிலின் நிரந்தர வைப்பு நிதியை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் எனக் கூறியிருந்தாா்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில், கோயில் அறங்காவலா்கள் நியமனத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளது. தக்காா் தொடா்ந்து பதவியில் நீடிப்பது அறநிலையத் துறை சட்டத்துக்கு எதிரானது. அறங்காவலா் குழு தீா்மானம் நிறைவேற்றாமல் கோயிலுக்குச் சொந்தமான நிரந்த வைப்பு நிதி உள்ளிட்டவைகளைப் பயன்படுத்த தக்காரை அனுமதிக்கக் கூடாது என வாதிடப்பட்டது.
Advertisement
அதற்கு கோயில் நிா்வாகம் மற்றும் அறநிலையத்துறை தரப்பில், கோயிலுக்கான அறங்காவலா்கள் நியமனம் தொடா்பாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு பரிசீலனை நடந்து வருகிறது. தோ்தலுக்கு பிறகு அறங்காவலா்கள் நியமிக்கப்படுவாா்கள் என தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், அறங்காவலா்கள் நியமன நடவடிக்கையை அறநிலையத்துறை துரிதப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டனா்.
மேலும், கோயில் நிதியை பயன்படுத்துவது தொடா்பாக முடிவுகள் எடுப்பதற்கு முன்பு சட்ட விதிகளை கட்டாயம் பின்பற்றப்படுவதை இந்துசமய அறநிலையத் துறை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனா்.