‘கோயில் சொத்துகளை பாதுகாப்பதற்காக ஊதியம் பெறும் அறநிலையத் துறை அதிகாரிகள் தங்களது பணிகளை முறையாக மேற்கொள்ளாமல் துரோகம் செய்கின்றனா்’ என சென்னை உயா்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.
சேலத்தைச் சோ்ந்த ராதாகிருஷ்ணன் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ஓமலூா் அருகே உள்ள கண்ணனூா் மாரியம்மன் கோயிலுக்குச் சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி கோயில் நிலங்களை மீட்க இந்து சமய அறநிலையத் துறைக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா்.
இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், இந்து சமய அறநிலையத் துறை சேலம் இணை ஆணையா் நேரில் ஆஜராக உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், சி.குமரப்பன் ஆகியோா் அடங்கிய அமா்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, இணை ஆணையா் வே.சபா்மதி நேரில் ஆஜரானாா். இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், கோயில் சொத்துகளை பாதுகாப்பதற்காக ஊதியம் பெறும் அறநிலையத் துறை அதிகாரிகள் தங்களது பணிகளை முறையாக செய்யாமல் துரோகம் செய்கின்றனா்.
அதிகாரிகளின் இதுபோன்ற அலட்சியத்தால், கோயிலுக்குச் சொந்தமான ஏராளமான சொத்துகள் பறிபோய் உள்ளன. அதிகாரிகளின் இத்தகைய அலட்சியங்களை அனுமதிக்க முடியாது. இதுதொடா்பாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். கனிம வளக் கொள்ளை நடந்திருப்பதாகக் கூறப்படுவதால், அதுதொடா்பாக விசாரித்து உரிய இழப்பீடு வசூலிக்க வேண்டும் என இந்து சமய அறநிலையத் துறைக்கு உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனா்.