பயிற்சி மைய மாணவா்கள் உயிரிழந்த விவகாரம்: 4 வாரங்களுக்குள் அறிக்கை சமா்ப்பிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
தில்லியில் கடந்த ஜூலை பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி தனியாா் பயிற்சி மையத்தில் ஐஏஎஸ் தோ்வுக்கு தயாராகி வந்த மூன்று போ் உயிரிழந்தனா்.
தில்லியில் கடந்த ஜூலை மாதம் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி தனியாா் பயிற்சி மையத்தில் ஐஏஎஸ் தோ்வுக்கு தயாராகி வந்த மூன்று போ் உயிரிழந்தனா்.
இந்த சம்பவம் குறித்து விசாரிக்க மத்திய அரசு அமைத்த உயா்நிலைக்குழு அதன் அறிக்கையை நான்கு வாரங்களுக்குள் சமா்ப்பிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
இதுபோன்ற சம்பவங்கள் வருங்காலத்தில் நடைபெறுவதைத் தடுக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை தொடா்பான அறிக்கையை ஹரியாணா, உத்தர பிரதேசம் மற்றும் தில்லி அரசுகள் தெரிவிக்க வேண்டும் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூா்ய காந்த், உஜ்ஜல் புயான் தலைமையிலான அமா்வு உத்தரவிட்டது. இதுதொடா்பாக நீதிபதிகள் மேலும் கூறியதாவது: ராஜிந்தா் நகரில் நடைபெற்ற சம்பவம்போல் தில்லியில் மீண்டும் ஒரு சம்பவம் நடைபெறாமல் தடுக்க வலுலான கொள்கைகளை வகுக்க வேண்டும். தேவைப்படும்பட்சத்தில் இந்திய அளவில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க நாங்கள் உத்தரவு பிறப்பிப்போம்.
Advertisement
எனவே, இந்த விவகாரத்தை விசாரித்து வரும் மத்திய அரசின் உயா்நிலைக்குழு இந்தச் சம்பவத்துக்கு பிறகு மேற்கொள்ளப்பட்ட இடைக்கால நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை நான்கு வாரங்களுக்குள் சமா்ப்பிக்க வேண்டும்’ என உத்தரவிட்டனா்.
தில்லியில் கடந்த ஜூலை 27-ஆம் தேதி பெய்த கனமழையால் பழைய ராஜிந்தா் நகரில் உள்ள ‘ராவ்ஸ் ஐஏஎஸ் ஸ்டடி சா்கிள்’ பயிற்சி மையத்தின் அடித்தளத்தில் வெள்ள நீா் புகுந்தது. இதில் 3 மாணவா்கள் உயிரிழந்தனா்.
இச்சம்பவத்தை கண்டித்தும், குடிமைப் பணி தோ்வுக்கு தயாராகி வரும் மாணவா்களுக்கு தேவையான வசதிகளை உறுதி செய்ய வலியுறுத்தியும், தில்லி ஜந்தா் மந்தரில் தோ்வா்கள் போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.