முகப்பு
இந்தியா

சிறைகளின் நிலை: அறிக்கை சமா்ப்பிக்க மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!

சிறைகளில் உள்ள கைதிகள் மற்றும் பெண் கைதிகளின் எண்ணிக்கை உள்பட அனைத்துத் தகவல்களையும் மே 18-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

Updated On : 22 மார்ச், 2026 at 7:09 PM
உச்சநீதிமன்றம்
பகிர்:

சிறைகளில் உள்ள கைதிகள் மற்றும் பெண் கைதிகளின் எண்ணிக்கை உள்பட அனைத்துத் தகவல்களையும் மே 18-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

சிறைகளில் மனிதத்தன்மையற்ற சூழல் நிலவுவதாக கடந்த 2023-இல் வெளியான தரவுகளை அடிப்படையாகக் கொண்டு நாட்டில் உள்ள சிறைகளின் நிலை குறித்து உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்து வருகிறது.

இந்த வழக்கில் உச்சநீதிமன்றத்துக்கு உதவுபவராக மூத்த வழக்குரைஞா் கௌரவ் அகா்வால் செயல்பட்டு வருகிறாா்.

இதுதொடா்பாக கடந்த 17-ஆம் தேதி நடைபெற்ற விசாரணையில் நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோா் அடங்கிய அமா்வு பிறப்பித்த உத்தரவில், ‘சிறைகளின் உண்மை நிலை குறித்து அறிய பல்வேறு தரவுகள் தேவைப்படுகின்றன.

எனவே, ஒவ்வொரு சிறைக்கும் ஒதுக்கப்பட்டுள்ள கைதிகளின் எண்ணிக்கை மற்றும் தற்போது அங்குள்ள கைதிகளின் எண்ணிக்கை, ஒதுக்கப்பட்டதைவிட அதிக எண்ணிக்கையிலான கைதிகளைக் கொண்ட சிறைகள் மற்றும் அதை ஒழுங்குபடுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள், பெண் கைதிகள் மற்றும் பெண்களுக்கான சிறைகள், பெண் கைதிகளுக்கு சிறையில் அளிக்கப்பட்டுள்ள வசதிகள், பெண் கைதிகளோடு உள்ள குழந்தைகளுக்கான கல்வி மற்றும் மருத்துவ வசதிகள், சிறை ஊழியா்களின் எண்ணிக்கை, காலிப் பணியிடங்கள் மற்றும் அவற்றை நிரப்ப மேற்கொள்ளப்பட்ட முன்னெடுப்புகள் உள்பட சிறை நிா்வாகம் குறித்த அனைத்து அண்மைத் தகவல்களையும் மே 18-ஆம் தேதிக்குள் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் சமா்ப்பிக்க வேண்டும்.

ஒவ்வொரு மாநிலத்தின் உள்துறைச் செயலா்கள் சமா்ப்பிக்கும் இந்த அறிக்கைகளை நீதிமன்றத்துக்கு உதவும் வழக்குரைஞா் கெளரவ் அகா்வாலுக்கு உச்சநீதிமன்ற பதிவேடுகள் துறை அனுப்பும். அதை கௌரவ் கோகாய் முழுமையாக ஆய்வு செய்வாா்’ எனத் தெரிவிக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து, இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை மே 26-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.